Skip to main content

போராட்டத்திற்கு தயாரான பூசாரிகள்; எச்சரிக்கை விடுத்த போலீசார் 

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

cuddalore temple priest issue involved police dsp

 

தமிழகம் முழுவதும் உள்ள கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத உதவித்தொகை 10,000 வழங்க வேண்டும்; முடங்கிக் கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்; அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று கிராம கோவில் பூசாரிகள் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

 

அதன்படி கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்கு மாவட்டம் முழுவதும் இருந்து கிராம கோயில் பூசாரிகள் திரண்டு வந்து ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இவர்களில் கிராம கோவில் பூசாரிகள், அருள்வாக்கு கூறுபவர்கள், பூக்கடை நடத்துகிறவர்கள் என ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வந்திருந்தனர். திடீரென பூசாரிகள் கூடியிருந்த இடத்திற்கு வருகை தந்த கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் தலைமையில், போலீசார் பூசாரிகளிடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. அனைவரும் கலைந்து செல்ல வேண்டும். மீறிப் போராட்டம் நடத்த முனைந்தால் அனைவரையும் கைது செய்வோம் என்று எச்சரிக்கை செய்ததோடு பூசாரிகளை கைது செய்து கொண்டு செல்வதற்காக வாகனங்களையும் கொண்டு வந்து நிறுத்தினர். இதற்காக ஏராளமான போலீசாரையும் கொண்டு வந்து குவித்தனர்.

 

போலீசாரின் எச்சரிக்கையையும், முன்னேற்பாடுகளையும் பார்த்த பூசாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கலந்து பேசி பிறகு போராட்டத்தை கைவிட முடிவெடுத்தனர். அதோடு தங்களது கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அங்கு வந்திருந்த பூசாரிகள் அனைவரிடமும் கோரிக்கை மனுக்களை பெற்ற நிர்வாகிகள் அந்த மனுக்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க அனுமதி பெற்றனர். அதன்படி பூசாரிகள் பேரவைத் தலைவர் பழனிவேலு, இணை அமைப்பாளர் பன்னீர், ஒன்றிய அமைப்பாளர்கள் மாயகிருஷ்ணன், மகாலிங்கம், பாண்டியன், திலீப் பக்கிரிசாமி ஆகியோர் கூட்டாகச் சென்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வருக்கு தங்களுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

 

அதன்படி அனைத்து மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். போராட்டம் நடத்த சுமார் 500க்கும் மேற்பட்ட கோவில் பூசாரிகள் கடலூருக்கு திரண்டு வந்திருந்தனர். ஆனால் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்குத் தடை விதித்த சம்பவம் பூசாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் கடலூர் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.