Skip to main content

அதிகரிக்கும் மின் உற்பத்தி; ஏமாற்றத்தில் விவசாயிகள் 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

cuddalore neyveli nlc increased power production 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில்  நமது நாட்டின் 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குநர் பிரசன்னகுமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் என்.சி.சி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டார்.

 

அதனைத் தொடர்ந்து குடியரசு தின உரையாற்றிய பிரசன்னகுமார், "வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் என்.எல்.சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரி உற்பத்தி அளவை ஆண்டிற்கு 440 லட்சம் டன்னாகவும், அனல் மின் உற்பத்தி அளவானது மணிக்கு ஒரு கோடியே 11 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் புதுப்பிக்கவல்ல மின்னாற்றல் உற்பத்தி அளவானது மணிக்கு 60 லட்சத்து 39 ஆயிரம் யூனிட் என, ஆக மொத்தத்தில் மின் உற்பத்தி அளவானது 2030 ஆம் ஆண்டிற்குள் 17,171 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட உள்ளது. பழுப்பு நிலக்கரியிலிருந்து ஆண்டுக்கு 4 லட்சம் டன் மெத்தனால் திரவம் தயாரிக்கும் திட்டம், நாள் ஒன்றுக்கு 290 டன் திறன் கொண்ட பழுப்பு நிலக்கரியிலிருந்து டீசல் உற்பத்தி செய்யும் ஆலை தொடங்கும் திட்டம் மற்றும் சுரங்க மேல் மண்ணை கட்டுமானத்திற்கு உதவும் மணலாக மாற்றுவதற்கு  ஆண்டுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் டன் திறன் கொண்ட ஆலை உருவாக்கும் திட்டம்  உள்ளது"  என மூன்று புதிய திட்டங்களை அறிவித்தார்.

 

குடியரசு தின உரையில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலங்களை வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது பற்றியும், உறுதியளித்தபடி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவது பற்றியும் எவ்வித அறிவிப்பும் வழங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.