![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/T7oahy_CKqM06eLnOFsPhwEgwpY3pH-PlVxeC4vky9E/1605877730/sites/default/files/inline-images/662_6.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள மதகளிர் மாணிக்கத்தில், தமிழ்நாடு விடுதலைப் படை தலைவர், மறைந்த தமிழரசனின் தாயார், பதூசு அம்மாளின் படத்திறப்பு விழா நடைபெற்றது. தமிழர் நீதிக் கட்சித் தலைவர், சுபா.இளவரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு பதூசுஅம்மாள் மற்றும் தமிழரசன் ஆகியோரின் படத்தினை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ்த் தேசிய இனம் தனது தன்னுரிமைகளைப் பெற வேண்டும், தேசிய இன விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்றால் அந்த லட்சியத்தை அடைவதற்கு ஆடம்பர அரசியல் செய்யாமல், அர்ப்பணிப்புடன் கூடிய தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலை வென்றெடுக்கத் தியாகங்கள் செய்வதற்கும் தயாராக வேண்டும்" என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் பேசும்போது, "தமிழர்கள் சாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தமிழர்களாக ஒன்றிணைந்து, ஒரே அணியில் போராடினால் தான், தமிழர்களின் உரிமைகளை, தமிழ்நாட்டின் உரிமைகளை, தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளிடமிருந்து மீட்டெடுக்க முடியும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது பதூசுஅம்மாள் 110 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்ததன் நினைவாக 110 மரக்கன்றுகளை 'பசுமை தமிழகம்' அமைப்பின் சார்பாக, அதன் அமைப்பாளர் தியாக. இளையராஜா வழங்கினார்.
இந்தப் படத்திறப்பு நிகழ்ச்சியில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தமிழ்ப் பேரரசுக் கட்சித் தலைவர் இயக்குனர் வ.கௌதமன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு, மக்கள் உரிமை கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ.சுகுமாறன், செம்மொழித் தமிழாய்வு நிறுவன முன்னாள் இயக்குனர் இராமசாமி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம் தலைவர் பேராசிரியர் ஜெயராமன், முத்துலட்சுமி வீரப்பன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய, தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.