Skip to main content

சாலையோர மரத்தில் கார் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
ddddd

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வேலவிநாயகர்குப்பத்தை சேர்ந்த வைரக்கண்ணு மகன் சண்முகம் (40). இவர் மரம் அறுக்கும் பிளேடு விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் தட்சிணாமூர்த்தி (40), விருப்பாட்சி கிராமத்தை சேர்ந்த சீசேசான் செந்தில் (45), வெள்ளக்கண்ணு மகன் இளங்கோவன் (40),  குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் கோதண்டராமன் (40) ஆகியோருடன் தனது காரில், கடலூர் முதுநகர் பகுதியிலுள்ள ஒரு மரப்பட்டறைக்கு சென்று மரம் அறுக்கும் பிளேடு புதுப்பித்து கொடுத்துவிட்டு தனது நண்பர்கள் நான்கு பேர்களுடனும் சண்முகம் தனது காரில் குறிஞ்சிப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். 

 

காரை சண்முகம் ஓட்டினார். குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை அருகே மின்சார அலுவலகம் எதிரில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென்று சண்முகத்தின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது அதிவேகமாக மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த செந்தில், தட்சிணாமூர்த்தி,  இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த சண்முகம் மற்றும் கோதண்டராமன் இருவர் பலத்த காயங்களுடன்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள்,  பொதுமக்கள் இருவரையும் மீட்டு  கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இதனிடையே இதுகுறித்து தகவலறிந்த குள்ளஞ்சாவடி காவல் காவல் ஆய்வாளர் சத்தியபாமா மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 

மேலும் இது குறித்து தகவலறிந்த இறந்து போன மூன்று பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.