Skip to main content

கந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி! 

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

cuddalore district virudhachalam husband and wife deputy collector office

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பூதாமூர் காந்தி ரோட்டைச் சேர்ந்த தம்பதி ஐயப்பன்- காமாட்சி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் உள்ளனர். ஐயப்பன் தனது வீட்டிலேயே சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களது குடும்பச் செலவுக்காக ஐயப்பன் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட் என்பவரிடம் ஐந்து பைசா வட்டி வீதம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கடனாக வாங்கியுள்ளார். 

 

கடன் வாங்கியதில் இருந்து மாத மாதம் வட்டியையும், அசலையும் திருப்பிக் கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையில் பணம் வாங்கியதற்குப் பிணையமாக 5 பவுன் தங்க நகையும் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது திரும்ப நாற்பதாயிரம் தரவேண்டும் எனக் கூறி கடந்த சில நாட்களாக வெங்கட் தொந்தரவு செய்து வந்துள்ளார். தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி உள்ள சூழ்நிலையில் ஐயப்பனிடம் தினமும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்து வந்த வெங்கட் நேற்று முன்தினம் (05/07/2020) ஐயப்பனின் வீட்டிற்குத் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஐயப்பனின் இரு சக்கர வாகனத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்றுள்ளனர். 

 

இதனைத் தட்டிக் கேட்டபோது ஐயப்பனையும், அவரது மனைவி காமாட்சியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த ஐயப்பன் அவரது மனைவி காமாட்சி இருவரும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றனர். அப்போது 'மீண்டும் ஒருமுறை வெங்கட்டிடம் சென்று கேளுங்கள்' என அறிவுரை கூறி போலீசார் அனுப்பியுள்ளனர். 

 

இதனால் விரக்தியடைந்த கணவன்- மனைவி இருவரும் நேற்று (06.07.2020) விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயைத் தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். இதனையறிந்த சார் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, அவர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனையும், தீப்பெட்டியையும் பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். 

 

http://onelink.to/nknapp

 

பின்பு அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்த சார் ஆட்சியர் பிரவீன்குமார் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மனு கொடுத்துச் சென்றனர். 

 

கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.