Skip to main content

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 50- க்கும் மேற்பட்டோர் கைது!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

 

CUDDALORE DISTRICT POLICE AND OFFICERS RAID SHOPS


தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதையடுத்து மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். 

 

அதனை தொடர்ந்து, கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பூதாமூரைச் சேர்ந்த செந்தில் முருகன் (வயது 43) முல்லாதோட்டம் தன்பத்சிங் (வயது 35), தசரத் (வயது 33), இந்திராநகர் பவுல்ராஜ் (வயதை 53) ஆகிய 4 பேரின் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

 

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத் அபுதாஹிர் மேற்பார்வையில் வடலூர் காவல் ஆய்வாளர் வீரமணி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 42), அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நீலாவதி (வயது 78), வடலூர் பால்கார தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 52), பார்வதிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 28) ஆகியோரது கடைகளுக்கு சீல் வைத்தனர். 

CUDDALORE DISTRICT POLICE AND OFFICERS RAID SHOPS

அதேபோல், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் செல்வம் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். இதேபோல் வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி முன்னிலையில், காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான காவல்துறையினர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் நல்லூர் கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக சிவகுமார், சுப்பிரமணியன், கண்டப்பங்குறிச்சி சீனிவாசன், வேப்பூர் கூட்டுரோட்டில் சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். மேலும் 4 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதேபோல் எழுத்தூரில் 2 பேரை ராமநத்தம் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, காவல் ஆய்வாளர் அன்னக்கொடி ஆகியோர் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது சிறுமுளை, செவ்வேரி, கீரனூர், குமாரை, பெருமுளை, நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து ஆறுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

பண்ருட்டியில் காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புதுப்பேட்டை, நடுவீரப்பட்டு, காடாம்புலியூர், முத்தாண்டிகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில் பண்ருட்டியைச் சேர்ந்த முகம்மது (வயது 43), திருவதிகை பரந்தாமன் (வயது 60), காந்தி (வயது 47), கோட்டை ஜானகிராமன் (வயது 72), மேல்பட்டாம்பாக்கம் முருகேசன் (வயது 45), அங்குசெட்டிபாளையம் சாகுல் ஹமீத்,  சித்திரைச்சாவடி சம்பத் (வயது 37), புதுப்பேட்டை சங்கர் (வயது 48), ராஜேந்திரன் (வயது 42), பக்கிரிபாளையம் மகபூப் (வயது 53), முருகன் (வயது 42), பிரகாஷ் (வயது 27), மேல்மாம்பட்டு சக்கரவர்த்தி (வயது 48) உள்ளிட்ட  15 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் (23/07/2021) மற்றும் நேற்று (24/07/2021) பெட்டிக்கடைகளிலும், மளிகை கடைகளிலும், வீடுகளிலும் பதுக்கி வைத்து போதை பொருட்களை விற்றதாக 50- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

 

இதனிடையே விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி மற்றும் காவல்துறையினர் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அக்பர் (வயது 47), விருத்தாம்பிகை நகர் ரவி (வயது 40) உள்ளிட்ட 5 பேர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்ததைப் பிடித்து கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் 12,300 ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.