Skip to main content

"என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நஷ்டஈடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்" - மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பேட்டி!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

cuddalore district nlc plant farmers district collector inspection

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கொம்பாடிகுப்பம், ஊத்தங்கால், பொன்னாலகரம் மற்றும் கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சுற்றி, என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் மணல்மேடு அமைந்துள்ளது. இம்மணல் மேடுகளில் இருந்து மழைக் காலங்களில் ஏற்படும் மண்சரிவினால், சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் வயல்களில், முற்றிலுமாக மணல் சூழ்ந்து விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது.

 

இதுகுறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரியிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தனர். அதையடுத்து, பொன்னாலகரம் கிராமத்தில் அமைந்துள்ள என்.எல்.சி மணல்மேட்டில் இருந்து வெளிவரும் மழைநீர் செல்லும் வடிகால் வாய்க்கால் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தவர், அதற்கான தீர்வுகள் குறித்து என்.எல்.சி அதிகாரிகளிடம் உரையாற்றினார்.

 

cuddalore district nlc plant farmers district collector inspection

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, "என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மணல் மேட்டில் இருந்து, ஏற்படும் மண் சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தாசில்தார், சார் ஆட்சியர் தலைமையில் தற்போது வரை 8 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

 

அதன் அடிப்படையில், கடந்த நான்கு வருடமாக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கான, நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மணல் மேட்டில் இருந்து வெளிவரும் மழைநீரை விவசாயம் செல்லும் பகுதிக்குச் செல்லவிடமால், தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கம்மாபுரம் பகுதியில் ஏற்படும் மண் சரிவினால், மணல் மேட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர், எவ்விதத் தடங்களின்றி செல்வதற்கான வழிகளைச் சரி செய்துள்ளனர். அடைப்பு ஏற்பட்டாலோ? வாய்க்கால் உடைபட்டாலோ? உடனடியாக நிவர்த்தி செய்வதற்காக ஜே.சி.பி இயந்திரம், மணல் மூட்டைகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.

Next Story

ஆய்வில் விசித்திரம் காட்டிய மாவட்ட ஆட்சியர் !

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The collector Research pretending to be a patient in uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலம், பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள், வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்த தொடர் புகாரின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ், அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆட்சியர் கிருதி ராஜ் தலையில் முக்காடு அணிந்து ஒரு நோயாளி போல் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த மருத்துவர், ஆட்சியர் கிருதி ராஜிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்சியர் கிருதி ராஜ், தான் யார் என்பதை தெரிவித்த பிறகு, அந்த மருத்துவமனையே ஆட்டம் கண்டுள்ளது. 

அதன் பின்னர், ஆட்சியர் கிருதி ராஜ் அந்த மருத்துவமனை முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வில், மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது என பல குற்றங்கள் கண்டறியப்பட்டது. 

இது குறித்து ஆட்சியர் கிருதி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு  நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்குப் பிறகும் மருத்துவர் வரவில்லை என சுகாதார நிலையம் தொடர்பாக எனக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், நான் மறைந்திருந்து, முக்காடு போட்டுக் கொண்டு அங்கு சென்றேன். அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது.

வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இருந்தாலும், சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை எனவும் தெரிந்தது. கையிருப்பில் உள்ள பெரும்பாலான மருந்துகள் காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் தூய்மையும் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று கூறினார்.