Skip to main content

என்.எல்.சியில் பாய்லர் வெடித்ததில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழப்பு... உறவினர்கள் முற்றுகை! ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்கக் கோரிக்கை! 

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

cuddalore district neyveli nlc palant boiler incident employees

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். 

 

இந்நிலையில் நேற்று (01/07/2020) முற்பகல் என்.எல்.சி நிறுவன இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5-ஆவது அலகில் உள்ள பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், பெரும் புகைமூட்டமாக அப்பகுதி காட்சியளித்தது. அதனை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக  தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  

 

இந்த தீ விபத்தில் கல்லமேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், நெய்வேலி டவுன்ஷிப்பை சேர்ந்த நாகராஜ், கொல்லிருப்பு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், மேலகுப்பத்தைச் சேர்ந்த பத்மநாபன், பெரியகாப்பான்குளத்தை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் ராமநாதன் உள்பட 7 பேரும் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

 

cuddalore district neyveli nlc palant boiler incident employees

 

மேலும் அப்பகுதியில் பணிபுரிந்த 17 பேர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் இறந்த தொழிலாளர்களின் உடலை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல என்.எல்.சி. அதிகாரிகள் முற்பட்டபோது இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சுற்றுப்பகுதியை சேரந்த சுமார் 500- க்கும் மேற்பட்டோர் என்.எல்.சி. வாயில் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சடலங்கள் கொண்டு செல்லப்பட்டது. 

 

இதுகுறித்து தகவலறிந்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சஹாமுரி, விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன் குமார், விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பா.ம.க மாநில பொதுச்செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், த.அசோக்குமார், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டனர்.

 

பின்னர் விபத்து குறித்து என்.எல்.சி. உயரதிகாரிகளுடன் கேட்டறிந்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தற்போது வெடி விபத்து நடைபெற்ற பாய்லர் அருகேயுள்ள 6 வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தள்ளனர். அதேபோல் தற்போது மீண்டும் 5 வது யூனிட்டில் பாய்லர் வெடித்து 7 தொழிலாளர்கள் உயரிழந்தும், 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

cuddalore district neyveli nlc palant boiler incident employees

 

இந்நிலையில் தொடர்ச்சியாக விபத்து நடந்து வரும் 4,5,6 ஆகிய யூனிட்டில் செயல்படும் பாய்லர்களை மூட வேண்டும், இறந்து போன தொழிலாளர்களுக்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும், இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், தொடர்ச்சியாக விபத்து நடந்து வரும் பகுதிகளை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதற்கட்ட பேச்சுவார்த்தையில் என்.எல்.சி அதிகாரிகளுடன் முன் வைத்தனர். 

 

"இனிவரும் காலங்களில் இதுபோல் சம்பவங்கள் நடைபெறாது என்றும், உயர் ரகமான இயந்திரங்களை கொண்டு இயக்கப்படும் என்றும் என்.எல்.சி நிறுவன தலைவர் ராகேஷ்குமார் உத்தரவாதம் அளித்துள்ளார்" என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். 

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் மேற்பார்வையில் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டுள்ளனர். 

 

இதனிடையே என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலைய முதன்மை பொதுமேலாளர் கோதண்டம், பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால், அவரை என்.எல்.சி. நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து அறிவித்துள்ளது. 

 

கடந்த இரண்டு மாதத்திற்குள் இரண்டு முறை பாய்லர் வெடித்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

 ரூ.48 கோடியில் 504 அடுக்குமாடி குடியிருப்பு; பயனாளிகளிடம் ஒப்படைத்த அமைச்சர் 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Minister Anbarasan handed over 504 flats constructed in Neyveli block to the beneficiaries

நெய்வேலி சமத்துவபுரம் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என  தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் மற்றும்  நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர்  ஊரகத் தொழில் துறை அமைச்சர்  தா.மோ அன்பரசனிடம் கோரிக்கை வைத்தனர். 

இதனையெடுத்து  400 சதுர அடி கொண்ட 3 அடுக்குகளில் 504 குடியிருப்புகள்  ரூ 48.6 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட குடியிருப்புகளை  பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான சாவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் மாநிலத்தில் குடிசையற்ற வீடுகள் இருக்க வேண்டும் என்ற  நோக்கில் முன்னாள் முதல்வர் கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி  விடற்ற ஏழைகளுக்கு  வீடுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து  தற்போதைய முதல்வர் அத்துறையை நகர்ப்புற வாழ்விடம் மேம்பாடு வாரியம் என மாற்றி தற்போது வீடற்றவர்களுக்கு வீடு வழங்கி வருகிறார். அதை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மாவட்டத்தில் ஏழைமக்கள் குடிசை வீடுகளில் மிகவும் மோசமான நிலையை கணக்கில் எடுத்து அவர்களுக்கும் இதுபோன்ற வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசினார். நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் இப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட குடியிருப்புகளை இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். பயனாளிகள் விரைந்து விண்ணப்பித்து வீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Minister Anbarasan handed over 504 flats constructed in Neyveli block to the beneficiaries

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இத்திட்டம் பயனாளிகளின் பங்களிப்புடன் கூடியது. பயனாளிகள் இந்த மாவட்டத்தை சேர்ந்தவராகவும் தனது பெயரில் பட்டா, வீடு இல்லாமலும்  மாத வருமானம் ரூ 25000 க்கு மிகாமல் இருத்தல்  வேண்டும்.  இதில் மாநில அரசு  ரூ.  6 லட்சமும் மத்திய அரசு  ரூ 1.5 லட்சமும், பயனளி பங்காக ரூ . 2 லட்சம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை 105 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 230 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. பயனாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வங்கிக் கடன் செய்து தரப்படும் என்றார்.

இந்நிகழ்வில் பண்ருட்டி ஒன்றியக் குழு தலைவர் சபா.பாலமுருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன் உள்ளிட்ட  வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
CITU union protest against NLC

நெய்வேலியில் உள்ள என்எல்சி நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு குளறுபடிகளைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் மெயின் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் ஜெயராமன் மற்றும் பொதுச்செயலாளர் அரசு ஆகியோர் போராட்டம் குறித்துப் பேசுகையில், “என்எல்சி நிறுவனத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர், பொறியாளர், அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான விடுப்புதான் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சென்ற மாதம் திடீரென பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ‘ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்ற நிர்வாகத்தின் இந்நடவடிக்கை தொழிலாளர் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்தில் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையை பயன்படுத்துபவர்களை தவிர்த்து சுரங்கம் மற்றும் தெர்மல் பகுதியில் 3 ஷிப்ட் ஆபரேஷனில் பணியாற்றுபவர்களுக்கு 8 நாட்களும், மூன்று ஷிப்ட் மெயின்டணன்ஸில் பணியாற்றுபவர்களுக்கு 7 நாட்களும் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் 6 நாட்கள் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மேற்கண்ட விடுப்பு Earn Leave அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வரை சுரங்கத்தில் பணியாற்றிய ஆப்ரேஷன் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 3 நாள், மெயின்டனன்ஸ் மற்றும் NSU, தெர்மல் பகுதி தொழிலாளர்களுக்கு 2 நாள் என C-Off வழங்கப்பட்டு வந்தது. 2015 ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்ட பிறகு OH விடுப்பு 5 நாட்கள் தொழிலாளர் - பொறியாளர் - அதிகாரிகளுக்கு சமமாக வழங்கப்பட்டது. C-Off பொறியாளர்களுக்கு கிடையாது.

ஊதிய உயர்வு மற்றும் UIS ஒப்பந்தம் கூட 2017 முதல் தொழிலாளர் - பொறியாளர்-அதிகாரிகளுக்கு ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை பர்னிச்சர் கடன் அநியாயமாகும். ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் - பொறியாளர் மத்தியில் வித்தியாசத்தையும், பேதத்தையும் ஏற்படுத்திடும் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

சில மாதங்களுக்கு முன்பு பர்னிச்சர் கடன் கொடுக்கப்பட்டது முதல் இன்று வரை பேச்சுவார்த்தையிலுள்ள சங்கங்கள் வாய்மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்ன? தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள விடுப்பு, பர்னிச்சர் லோன் உள்ளிட்டவைகளை பெறுவதற்கு ஏன் குரல் எழுப்பவில்லை. பேச்சுவார்த்தை சங்கங்களின் இந்த மௌனம் தொழிலாளர்களை வேதனை அடைய செய்துள்ளது.

எனவே இரண்டாம் சனிக்கிழமை விடுமுறைக்கு பதிலாக அளிக்கப்படும் ஸ்பெஷல் அடிஷனல் லீவை 12-ஆக அளித்திடு! பர்னிச்சர் லோன், லேப் டாப், மொபைல் போன் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிடு! மிகை நேர பணிக்கு சி ஆப் வழங்கிடு என வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் - ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

வெளிமாநில இடமாற்றம்: நிறுவனத்தில் தொழிலாளர் - ஊழியர்களை பொறுத்தவரையில் நெய்வேலிக்கு வெளியே இடமாற்றம் செய்யும் நடைமுறை கிடையாது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு 6 பேர் வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை பேச்சுவார்த்தை சங்கங்கள் தட்டிக் கேட்காமல் இருப்பது மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடும். வரும் காலத்தில் நிர்வாகம் தொழிலாளர்களை வெளி மாநிலங்களுக்கு பந்தாடுவதற்கு வழிவகுத்திடும் என்று சிஐடியு எச்சரிக்கை விடுக்கிறது. 60 ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை தொடர்ந்திட வேண்டும் எனவும், போடப்பட்டுள்ள வெளிமாநில இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது” என்றார்.