Skip to main content

மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு... ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசம்!   

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

cuddalore district manimuktha river flood peoples


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (05/01/2021) இரவு பொழிந்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் வடிகால் இல்லாத பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. 

 

விருதாச்சலம் அடுத்த கம்மாபுரம், ஆலடி, ஊ.மங்கலம், கவணை, கருவேப்பிலங்குறிச்சி, சத்தியவாடி, கார்மாங்குடி, மேலப்பாளையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், அப்பகுதியில் சம்பா சாகுபடிக்காக நடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

 

கள்ளக்குறிச்சி பகுதியில் பொழிந்த கனமழை காரணமாக மணிமுக்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரும், கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஓடைகளில் இருந்து மணிமுக்தாறுக்கு வரும் தண்ணீர் என மொத்தம் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேமாத்தூர் அணையிலிருந்து மணிமுக்தாற்று திறந்துவிடப்பட்டுள்ளது. 

 

இந்த தண்ணீரானது மணிமுக்தாற்றில் வந்து கொண்டிருப்பதால் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள ஓடைகளில் இருந்து தண்ணீர் வெளியேறி மணிமுக்தாற்றில் கலப்பதால் விருதாச்சலம் கார்குடல் அணைக்கட்டிலிருந்து 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை மணிமுக்தாற்றில் வெளியேறிக்கொண்டிருக்கிறது. மணிமுக்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை விருத்தாசலம் பாலத்தில் நின்றபடி பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். 

cuddalore district manimuktha river flood peoples

 

கடந்த சில வருடங்களாக ஆற்றில் தண்ணீர் வராத நிலையில் திடீரென வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வெள்ளப்பெருக்கைக் கண்டு ரசித்தனர்.  

 

இதேபோல் வெள்ளாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தே.பவழங்குடி, ஒட்டிமேடு, கோட்டுமுளை, கார்குடல், குமாரமங்கலம், கம்மாபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆற்றில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரை நடவு செய்யப்பட்டிருந்த அனைத்து வயல்களும் தண்ணீரில் மூழ்கி கடல் போல காட்சியளித்தன. 

 

மழை தொடர்ந்து நீடித்தால் கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து பவழங்குடி, தேவங்குடி வரை மணிமுக்தாறு மற்றும் வெள்ளாற்றிற்கும் இடையே உள்ள சுமார் 10 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் அவ்வப்போது ஆற்றை பார்வையிட்டு தண்ணீர் அளவைக் கண்காணித்து வருவதுடன் ஆற்றில் இறங்கி குளிக்கவும், துணி துவைக்கவும் வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வேறு இடங்களுக்கு சென்று பாதுகாப்பாக தங்குமாறு எச்சரித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.