Skip to main content

ஏரியைத் திறந்து விட்டு தண்ணீரை வீணாக்கிய சமூக விரோதிகள்!

Published on 28/06/2020 | Edited on 28/06/2020


 

cuddalore district lake water released farmers and officers

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது பெருமுளை கிராமம். இந்த கிராமத்தில்136 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு மீன்வளத்துறை சார்பில் ஏரியில் மீன் வளர்க்க குத்தகைக்கு விட்டுள்ளனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

 

அதன்மூலம் வளர்ந்த மீன்களைப் பிடிப்பதற்காக ஏரி தண்ணீரைச் சிலர் திறந்துவிட்டு உள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். அப்பகுதி விவசாயிகள் இதுமட்டுமல்லாமல் ஏரியின் சுற்றுப்புறங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலத்தை விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்காக உழுது  தயார் செய்து வைத்திருந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் (26/06/2020) இரவு மர்ம நபர்கள் சிலர் ஏரியில் மதகின் நான்கு புறங்களிலும் தண்ணீரை திறந்து விட்டதனால் மானாவாரி விவசாயம் செய்யத் தயாராக இருந்த விளைநிலங்களில் ஓடிச்சென்ற தண்ணீர் நிரம்பியதால் விவசாயம் செய்ய முடியாமல் பாழாகியுள்ளது. நேற்று (27/06/2020) அதிகாலை இதைப் பார்த்த விவசாயிகள் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தி அதில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

தகவலறிந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் மற்றும் சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சோழராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அனைத்து கதவுகளையும் உடனடியாக மூடுவதற்கும் தண்ணீர் திறந்துவிட காரணமான மீன்பிடி குத்தகைதாரர்களை அழைத்து இது இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்