Skip to main content

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை! கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை!!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

 

cuddalore district husband and wife incident mahila court judgement


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு (வயது 35). இவரது மனைவி கோரணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி (வயது 27). இவர்கள் இருவரும் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறி ஆபத்தாரணபுரம் அம்மன் கோவிலில் (20/07/2016) அன்று திருமணம் செய்துக் கொண்டனர். பின்னர் ஜோதிலட்சுமி வேலுவின் தாய், தந்தையுடன் சேர்ந்து வசித்து வந்தார். சில மாதங்களில் கணவன் வீட்டார் ஜோதிலட்சுமியிடம் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தி வந்தனர். இதனிடையே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

 

இந்த நிலையில் கணவர் வேலு, அவரது தந்தை கணேசன்,  தாயார் செல்வாம்பாள் ஆகியோர் ஜோதிலட்சுமியிடம் வரதட்சனைக் கேட்டு சித்திரவதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த (29/09/2017) அன்று வீட்டில் யாரும் இல்லாதபோது ஜோதிலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து வேலு, அவரது தந்தை கணேசன், தாயார் செல்வாம்பாள் ஆகியோரை கைது செய்தனர்.

 

இது தொடர்பான வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று (23/01/2021) தீர்ப்பளித்தார். தீர்ப்பில் குற்றவாளி வேலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும், அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், அவரது தந்தை கணேசன்,  தாயார் செல்வாம்பாள் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.