Skip to main content

போலி மருத்துவர்கள் அதிகரிப்பு; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

cuddalore district collector inspect virudhachalam government hospital

 

கடலூர் மாவட்டம், ராமநத்தம் பகுதியில் மருந்து கடை வைத்திருந்த முருகன் என்பவர் கருக்கலைப்பு செய்ததில் அகிலா என்ற பெண் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்களை குறித்து ஆய்வு நடத்தச் சென்றபோது மங்களூரில் போலி மருத்துவர் ஒருவர், தனது வீட்டு மாடியில் வைத்து ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தது தெரியவந்தது. அந்தப் போலி மருத்துவர் மருத்துவ அதிகாரிகளை கண்டதும் தலைமறைவாகிவிட்டார். 

 

கருக்கலைப்புக்கு தயாராக இருந்த பெண்ணை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விருத்தாசலத்தில் நேற்று அரசு மருத்துவமனையில் "நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை" என்ற இயக்கத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, ஆண்கள் பெண்கள் வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை மையம், ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஆகியவற்றை பார்வையிட்டார். 


அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 14 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர் செவிலியர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை இருப்பது குறித்து நகராட்சி சேர்மன் சங்கவியும், கவுன்சிலர் சிங்காரவேலும் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 


அப்போது ஆட்சியர் கூறும்போது, “மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் ராமாநத்தத்தில் மெடிக்கல் ஷாப்பில் கர்ப்பிணி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோன்று அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வது குறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார். 


வேப்பூர் மெடிக்கல் ஷாப்பில் சிகிச்சை பெற்ற சிறுவன் இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர்களில் கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையில் ஒரு குழு ரகசியமான முறையில் மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்கள் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்பவர்கள் குறித்த தகவலை சேகரித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும்” என்று எச்சரித்தார். 

 

மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின்போது, மாவட்ட சுகாதார பணிகள், துணை இயக்குநர் டாக்டர் மீரா, விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவர் எழில், நகராட்சி கமிஷனர் சசிகலா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.