Skip to main content

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- 65 வயது முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறை!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழ்பாதி அம்மன் கோயிலை சேர்ந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி. அதே தெருவை சேர்ந்தவர் 65 வயதான ராமச்சந்திரன். சிறுமியின் பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15.8.2018 அன்று சிறுமியின் பெற்றோர் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தனர்.
 

cuddalore district child incident old man special court judgement

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்துகொண்ட ராமச்சந்திரன் அங்கு சென்று சிறுமியை வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அதனைப் பார்த்துக் கொண்டிருந்த எதிர்வீட்டுக்காரர் ஒருவர் நீண்ட நேரம் ஆகியும் ராமச்சந்திரன் கீழே வராததால் சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது முதியவர் ராமச்சந்திரன் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுப்பதை கண்டுள்ளார். உடனடியாக அந்த சிறுமியை மீட்ட எதிர் வீட்டுக்காரர் முதியவரை அடித்து விரட்டினார். 


இந்நிலையில் வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரிய வர, அவர்கள் மந்தாரக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து, கடலூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 


இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வப்பிரியா பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, முதியவர் ராமச்சந்திரனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.