Skip to main content

"திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்!"- வேளாண் இணை இயக்குனரின் வேண்டுகோள்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

cuddalore district agricultural deputy director statement

குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "வேளாண்மையில் ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால் மண்வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க விவசாயிகள் தொடர்ந்து உயிர் உரங்களைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தை மீண்டும் வளமாக்க வேண்டும். இதன் மூலம் நஞ்சற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தியை பெருக்க முடியும். 

 

குறைந்த செலவில் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப அங்கக இடு பொருட்களான திரவ உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து மண் வளம் பாதுகாக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். இதனால் ரசாயன உரங்களின் இறக்குமதியும் பயன்பாடும் குறையும். உயிர் உரங்கள் நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உண்டாக்குகிறது. பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது. தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்கள் 25% சேமிக்கப்படுகிறது.

 

மாசற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துகிறது. இயற்கை வழி பண்ணையம் ஊக்குவிக்கப்படுகிறது. மகசூல் 15% முதல் 20% வரை அதிகரிக்கிறது.

 

கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம், பயிர்வகைகள் மற்றும் மணிலாவுக்கு ரைசோபியம், அனைத்து பயிர்களுக்குமான பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோஸம் உள்ளிட்ட எட்டு வகையான உயிர் உரங்கள்,  ஆண்டுக்கு 50,000 லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் தனியாரை விட குறைந்த விலையில் அதிக தரத்துடன் விநியோகம் செய்யப்படுகின்றன.

 

உலகத்திலேயே முதன் முறையாக திரவ உயிர் உர உற்பத்தியில் அதி நவீன தொழில்நுட்பமான நுண்ணிய குழாய் வடிவ உறைத்தொகுதி கொண்டு உயிர் உர பாக்டீரியாக்களை பிரித்து ஒரு மில்லி லிட்டர் திரவ உயிர் உரத்திற்கு 100 மில்லியன் பாக்டீரியாக்களை கொண்டதாக தயாரிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்கும் பொருட்களை சேர்த்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. திட உயிர் உரத்தை காட்டிலும் நூறு மடங்கு அதிக பாக்டீரியாக்களை கொண்டது. எடுத்துக்காட்டாக ஏக்கருக்கு 200 கிராம் கொண்ட 46 பொட்டலங்கள் கரும்பு பயிருக்கு உயிர் உரங்களை இடுவதால் கிட்டும் பயன், அதற்காகும் செலவான 276 ரூபாயில் திரவ உயிர் உரம் கொண்டு 112 ரூபாய் பெறலாம்.

 

ஆகவே, திரவ உயிர் உரங்கள் உயிர் உரங்களை காட்டிலும் நுண்ணுயிர் அளவு, காலாவதி காலம், செலவு, பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றில் மேம்பட்டதாக இருக்கும். ஆகவே குருவை, சொர்ணவாரி மற்றும் காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் திரவ உயிர் உரங்களை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார். 

Next Story

போராட்டத்திற்கு தேதி குறித்த விவசாயிகள்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
 Farmers on the date for the struggle 

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 12 அம்ச வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்றபோது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுக்கப்பட்டனர்.

இந்த தடுப்புக்கட்டைகளைத் தகர்த்தெரிந்த விவசாயிகள் தடைகளை மீறி டெல்லி நோக்கி புறப்பட்டபோது விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். மேலும் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு பட்டுத் தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயி ஒருவரும் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. அதே சமயம் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், “டெல்லிக்கு பேரணியாக செல்லும் எங்கள் (விவசாயிகள்) திட்டம் அப்படியே உள்ளது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எல்லையில் பலத்தை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி விவசாயிகள் நாடு முழுவதிலும் இருந்து ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ள அரசு அனுமதிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் நன்பகல் 12 மணி முதல் மாலை முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.