Skip to main content

மழை வெள்ளத்தால் நீரில் மூழ்கிய பயிர்கள்! கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!  

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்துவருகிறது. கடந்த 18ஆம் தேதி கடலூரில் 15 செ.மீ. மழை பொழிந்த நிலையில், தற்போது கடந்த மூன்று நாட்களாக அதிகபட்சமாக 17.3 செ.மீ. மழை பொழிந்துள்ளது. 

 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிவது நின்றாலும் தொடர் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் மீளவில்லை. வயல்வெளிகள் மட்டுமல்லாது குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் வடியாததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதுடன், பல குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. 

 

கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புதுப்பாளையம், பாரதியார் நகர், முதுநகர், சீதாராம் நகர், வண்ணாரபாளையம்,  கோண்டூர், பாதிரிக்குப்பம், பச்சையாங்குப்பம், புதுப்பாளையம், குமளங்குளம், சேடப்பாளையம், பாதிரிக்குப்பம், சாவடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

 

இந்தத் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக 20,500 ஏக்கர் நெற்பயிர்கள், 2,700 ஏக்கர் உளுந்து, 100 ஏக்கர் மக்காச்சோளம், 1,800 ஏக்கர் பருத்தி மற்றும் தோட்டப் பயிர்களான மல்லிகை பூ ஆகியவை 5 ஆயிரம் ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

 

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கடலூர் - புதுவை இணைக்கக் கூடிய கும்தாமேடு தரைப்பாலம் பெண்ணை ஆற்றில் முற்றிலுமாக மூழ்கி இரண்டு கரைகளிலும் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் ஓரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பேருந்து பயணிகள் நிழற்குடை கீழே சாய்ந்த நிலையில் ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு நிழற்குடை இடித்து ஆற்றில் தள்ளப்பட்டது. 

 

விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் கிராமத்தின் இருபக்கமும் செல்லக்கூடிய ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஓடையைக் கடந்து வெள்ளம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வழியாக கரை புரண்டு கிராமத்தைச் சுற்றிலும் சூழ்ந்துள்ளது. இதனால் அம்மக்கள் கிராமத்தைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனித் தீவாக மாறிப்போன இக்கிராம மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வெளியேற முடியாத சூழலில் உள்ளனர். இதேபோல் அருகிலுள்ள இளமங்கலம், ஆலிச்சிக்குடி, ஆலந்துறைப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.