Skip to main content

''குற்றவாளிகள் தப்பிக்க முடியாது...'' - வழக்கறிஞர் ப.பா. மோகன் 

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

"Criminals can't escape!" - Advocate P.B. Mohan

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மூன்று ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ், தனக்கும் தன் தரப்புக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தரப்பு வழக்கறிஞர்கள், சம்பவத்தன்று திருச்செங்கோடு மலைக்கோயிலில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்று வாதிட்டனர். 

 

இதற்கிடையே, வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சுவாதி, சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருப்பது தன்னுடைய உருவமே அல்ல என்று திடீரென்று பிறழ் சாட்சியம் அளித்தார். இதையடுத்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கேமரா பொருத்தப்பட்ட இடங்கள், நுழைவு வாயில் பகுதிகள் நேரில் ஆய்வு செய்யப்படும் என நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அறிவித்தனர்.

 

அதன்படி, ஜன. 22ம் தேதி அவர்கள் திருச்செங்கோடு மலைக்கோயிலில் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடர்பாக கோகுல்ராஜின் தாயார் தரப்பு வழக்கறிஞரான பவானி பா.மோகனிடம் கேட்டபோது, “கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ் சாட்சியாக மாறிவிட்டார். இதனால் நீதிபதிகள் தாமாக முன்வந்து, சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்துள்ளனர். வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. எனவே, சுவாதி பிறழ் சாட்சியாக மாறினாலும், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது” என்றார்.

 

அதேபோல் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “நீதிபதிகள் சிறப்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.

 

முன்னதாக, நீதிபதிகள் வருகையையொட்டி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேற்பார்வையில், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீதிபதிகள் ஆய்வு ஒருபுறம் இருந்தாலும், பக்தர்கள் வழக்கம்போல் கோயிலுக்குள் எந்தவித கெடுபிடியுமின்றி வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு ஆம்ஸ்ட்ராங் பாராட்டு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Armstrong praises senior advocate  mohan

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் சந்தித்து மரியாதை செலுத்தி நன்றி தெரவித்தார். 

 

“பல்வேறு மிரட்டலும் உயிருக்கு அச்சுறுத்தலும் இருந்தபோதும், தன் உயிர் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட உரிமை இழந்து வாடும் மக்களின் உரிமைக்காக போனால் போகட்டும் என தன்னுயிரை துச்சமாக நினைத்து எட்டு வருடப் போராட்டங்களுக்கு பிறகு ஒரே சாட்சி பிறழ் சாட்சியாக மாறிவிட்ட பிறகும், விடாமுயற்சியால் உண்மை வெல்லும் என அடுத்தடுத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாதாடி ஆயுள் தண்டனையை பெற்றுத் தந்துள்ள உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்” என்று இந்தச் சந்திப்பின் போது ஆம்ஸ்ராங் தெரிவித்தார்.  

 

 

Next Story

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 Separate law to prevent caste incident

 

கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்கிறது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக, கொடூரமான முறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு  காதலர்கள் சென்ற போது, ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்தியது. பிறகு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிபிசிஐடி காவலர்கள் விசாரணை செய்த வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது.

 

அந்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பில் கொலைக்கு சாதி தான் முக்கிய காரணம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது என்றும், சாதி என்ற பேயின் தாக்கத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றம் முன்னிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

 

இந்தியா முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது. இந்த வழக்கில் பல்வேறு நிலைகளில் விசாரணை மேற்கொள்ள காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.