Skip to main content

3 ஆண்டுகளாக தேர்தல் டெபாசிட் தொகை தராமல் இழுத்தடிப்பு; சி.பி.எம். வேட்பாளர் புகார்

 

CPM candidate complain about delaying payment election deposit for 3 years

 

மூன்று  ஆண்டுகளாகத் தேர்தல் டெபாசிட் தொகையைத் திருப்பித் தராமல் மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடிப்பது தொடர்பாகத் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்ட பாண்டி, திண்டுக்கல் ஆட்சியருக்குப் புகார்  எழுதியுள்ளார். 
              


அதில் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக என்.பாண்டி வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். இதற்காக டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்தியுள்ளார். தேர்தல் முடிவின் அடிப்படையில் வேட்பாளர் பாண்டி தனது டெபாசிட் தொகையை தக்க வைத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரி திருப்பித் தரவில்லை. இந்த டெபாசிட் தொகையை திருப்பித் தரவேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலரான திண்டுக்கல் கோட்டாட்சியருக்கு  கடிதம் எழுதியுள்ளார். 

 

ஆனால் டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படாததால் இதனையடுத்து 2022ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி கோட்டாட்சியருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகப் பல முறை நேரில் சென்று கேட்டும் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் 3 ஆண்டுகள் கழிந்த பின்பும் டெபாசிட் தொகை கிடைக்காததால் தற்போது மீண்டும் தனது டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் ஆட்சியருக்கு என்.பாண்டி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடித நகல் மாநில தேர்தல் ஆணையருக்கும் அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து டெபாசிட் தொகை கிடைக்கவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பாண்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !