Skip to main content

“தமிழகத்திற்கு அடிமை அரசு தேவையில்லை, பா.ஜ.க. - அதிமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும்..!” - பிரகாஷ் காரத் 

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

CPIM Prakash Karat speech at dindigul


“தமிழகத்திற்க அடிமை அரசு தேவையில்லை தி.மு.க. தலைமையிலான புதிய அரசு அமைய வேண்டும். இந்தத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முறியடிக்கப்பட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
 


திண்டுக்கல்லில் கட்சியின் சார்பாக நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரச்சார துவக்க மாநாட்டில் பிரகாஷ் காரத் கலந்துகொண்டு பேசும்போது, “இந்தத் தேர்தல் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவமான தேர்தலாக உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிற வழிநடத்தக்கூடிய ஒரு அரசாக உள்ளது. இந்த அரசு, இந்தியாவினுடைய அரசியல் அமைப்புச் சட்டத்தை, மதசார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற மாண்புகளை அழித்து ஒழித்துவிட்டு, இந்து ராஷ்டிரத்தை உருவாக்குகிற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 
 


ஏழாண்டுகளாக நடைபெறும் இந்த மத்திய பா.ஜ.க. ஆட்சியை எதிர்க்கக்கூடிய ஒரு எதிர்க்கட்சிகூட இருக்கக்கூடாது என்றும், ஒரு ஒற்றை கட்சி ஆதிக்க ஆட்சியை உருவாக்க முயற்சிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அப்படிப்பட்ட ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களை மத ரீதியாக, இன ரீதியாக துண்டாடக்கூடிய அரசாக உள்ளது. சிறுபான்மை மக்களைத் துண்டாடக்கூடிய நிலை உள்ளது. ஆட்சிக்கு எதிராக, அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், விமர்சனம் செய்தால் அவர்களை அரசியல் ரீதியாக, சமூக ரதீயாக ஒடுக்குகிறது. ஊடகங்களையும் ஒடுக்குகிறது. எதிர் கருத்துக்களைச் சொல்பவர்கள் மீது தேசத்துரோக சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவுசெய்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழான ஆட்சியை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் வழக்கம்போல நடைபெறும் தேர்தல் அல்ல. ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மட்டுமல்ல, மத்திய பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்குமான தேர்தலாக உள்ளது என்பதை ஆழமாக பார்க்க வேண்டும். 

 

மத்திய பாஜக அரசு எதைச் செய்தாலும் இந்துக்களுக்காக செய்வதாக கூறுகிறது. ஆனால், அப்படிப்பட்ட ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறதா? கடந்த 7 ஆண்டுகால மோடி ஆட்சியை நாம் ஆய்வு செய்தோமானால், பெருவாரியாக உள்ள இந்து மக்கள் மோடியின் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டிலுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் என இந்து மக்களுக்கு எதிரான ஆட்சியாகத்தான் உள்ளது. பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் அன்னிய மூலதனத்திற்கும் உதவி செய்யக்கூடிய திட்டங்கள்தான் அமைந்திருக்கின்றன. டெல்லியைச் சுற்றி கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் மிக பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 250 விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் இறந்துள்ளார்கள். நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தாமல் மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடுமையான பனியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க விவசாயிகள் சந்தையை கார்பரேட் நிறுவனங்களுக்கு திறந்துவிடுவதற்காகத்தான் இந்த 3 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளின் சுயசார்புக்கு இந்தச் சட்டம் வழிவகுப்பதாகப் பிரதமர் சொல்கிறார். 

 

ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச எல்லைகளில் போராடக்கூடிய அந்த விவசாயிகளைக் கேட்டுப்பாருங்கள். உண்மையில் அம்பானிகளுக்கும் அதானிகளுக்குமான சுயசார்பு திட்டமாகத்தான் இந்த 3 கொடிய வேளாண் சட்டங்கள் இருக்கிறது என்பார்கள். அந்த உண்மையை நாம் நாட்டு மக்களுக்கு உரத்துச் சொல்ல வேண்டியுள்ளது. சமீபத்தில் தனியார்மயக் கொள்கையை மத்திய பட்ஜெட்டில் பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட துறைகளான தொலைத்தொடர்பு, இரும்பு மற்றம் எண்ணெய் வளத்துறை, பாதுகாப்பு தவிர கேந்திரம் அல்லாத அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கப் போவதாக அறிவித்துள்ளது; அதன் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.


 

நாட்டிலுள்ள 15க்கும் மேற்பட்ட இரும்பு, எஃகு தொழிற்சாலைகள் பொதுத்துறை நிறுவனங்களாக உள்ளன. இவற்றில் நான்கை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ள தொழிற்சாலைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கவுள்ளது. இந்திய மக்கள் பல்லாண்டுகளாக கட்டிக்காத்து வந்த செல்வ வளங்களைச் சூறையாடுகிற வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதற்கு விசாகபட்டிணத்தில் நடைபெறும் சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். அங்குள்ள அரசுக்குச் சொந்தமான இரும்பு எஃகு தொழிற்சாலையின் 100 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக அந்த மாநில மக்கள் ஒன்றுபட்டு அந்த இரும்பு எஃகு தொழிற்சாலையைத் தனியாருக்குத் தாரை வார்க்க மாட்டோம் என்று தினந்தோறும் விசாகப்பட்டிணம் வீதிகளில் பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், சேலம் இரும்பு எஃகு ஆலை, திருச்சி பெல் மிகுமின் நிறுவனம் ஆகியவை ஆபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த நிறுவனங்களைப் பாதுகாக்க அதிமுக அரசு தயாராக இல்லை. மத்திய அரசு கொண்டு வருகிற அனைத்து சட்டங்களையும் ஆதரிக்கிற கட்சியாக அதிமுக உள்ளது. சமீபத்தில் பாஜக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அதிமுக எம்.பி.க்கள் கைதூக்கி ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், மக்களவையிலும் சரி மாநிலங்களவையிலும் சரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் இளமரம் கரீம், ராகேஷ் ஆகிய இரண்டு பேர் எதிர்த்து உரத்து குரல் எழுப்பியதன் விளைவாக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட துணிச்சல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் இருக்கிறது. 

 

அதே போல் கேரளாவில் நமது பினராயிவிஜயன் தலைமையிலான இடதுமுன்னணி அரசாங்கம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி தீர்மானத்தை ஏகமனதாக  நிறைவேற்றிய துணிச்சல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் உண்டு. இதுதான் நமக்கும் பிற  கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு. ஆனால், தமிழகத்தில் ஆட்சிபுரியும் அதிமுக அரசு பாஜகவின் அடிமை அரசாக உள்ளது. அதற்கு எதிராக இந்த தேர்தல் களத்தில் நாம் களம் காண வேண்டும்.  

 

மேலும் மத்திய பாஜக அரசு அதானி, அம்பானிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியுள்ளது. 4 தொழிலாளர் சட்டங்களை உருவாக்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவார்கள். இந்த தொழிலாளர் சட்டங்களை அதிமுக எம்.பி.க்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கைதூக்கி ஆதரித்து வந்துள்ளனர். இந்த அரசைத்தான் அதிமுக தலைவர்கள் அப்பட்டமாக ஆதரிக்கிறார்கள். இந்தக் கட்சிகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இயக்கங்கள் பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. நமது சிஐடியுதான் விசாகப்பட்டிணத்தில் உள்ள இரும்பு எஃகு ஆலையைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது என்று அனைத்து சக்திகளையும் திரட்டி போராடிக்கொண்டிருக்கிறது. 

 

அதே போல டெல்லியில் போராடக்கூடிய விவசாயிகளை வழிநடத்திக்கொண்டிருப்பது நமது விவசாய சங்கத்தலைவர்கள் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ஹன்னன்முல்லா, கே.கே.ராகேஷ் ஆகியோர் தலைமையிலான விவசாயிகளை, சங்கத்தலைவர்கள் அங்கேயே தங்கிப் போராடி, வழிநடத்தி வருகிறார்கள். பாஜகவின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக உறுதியாக களத்தில் நின்று போராடுவது நம்முடைய கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும்தான். எனவே தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக உறுதியான முறையில் போராட வேண்டும் என்று சொன்னால், சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது மிக முக்கியமானது. அதுமட்டுமல்ல, இடதுசாரிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு ஏன் செல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு புதிய அரசு உருவாகி அதை சரியான வழியில் செலுத்துவதற்கு நம்முடைய கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பது அவசியம்.

 

இந்துத்துவாவும் கார்ப்பரேட்டும் இணைந்த ஒரு மோசமான எதேச்சதிகார அரசாக மோடி அரசாங்கம் விளங்குகிறது என்பதைக் குறிப்பிட்டேன். உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக உள்ள யோகி ஆதித்ய நாத், ஒரு அப்பட்டமான மதவெறியராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு சி.ஏ.ஏ. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கானவர்கள் மீது வழக்கு போட்டார். அபராதமாக லட்சக்கணக்கான ரூபாய்களை வசூலித்தார். இளம் காதலர்கள் மீது ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் கடுமையான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டார். ஆணும் பெண்ணும் விரும்பினால் மணம் முடித்துக்கொள்ளலாம், அதற்கு மதம் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தெளிவாக சொன்ன பிறகும், அந்த தீர்ப்பை மதிப்பதற்கு யோகி அரசு தயாராக இல்லை. 



அதே போல, பசுவதை என்ற பெயரில் பல மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக ஒரு பேயாட்சியை ஆர்.எஸ்.எஸ். - பாஜக நடத்தி வருகின்றன. இதுதான் மோடி சொல்லக்கூடிய புதிய இந்தியா. ராமர் கோவிலைக் கட்ட முயற்சிக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்ட முயற்சிக்கிறார்கள். பழைய நாடாளுமன்ற கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்ற உள்ளனர். அந்த நாடாளுமன்றத்திற்குள் ஜனநாயகமும் அருங்காட்சியாக மாற்றப்படும். நாடுமுழுவதும் உள்ள கட்சிகளை பிஜேபி தன்வயப்படுத்தி வருகிறது. 

 

அசாம் மாநிலத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அசாமில் உள்ள அசாம் கனபரிசத் கட்சியுடன் கூட்டணி வைத்த பிஜேபி, அந்தக் கட்சியை ஆக்கிரமித்து இப்போது அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் பாஜகவின் தலைவராக உள்ளார். அசாம் கனபரிசத் கட்சியை பாஜக விழுங்கிவிட்டது. நான் எச்சரிக்கிறேன் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவிற்கும் இதே கதி ஏற்படும். அதிமுக பாஜகவின் கருவியாக உள்ளது. அதன் பின்புலத்தில் இருந்து அதிமுக பாஜகவால் இயக்கப்படுகிறது. அதிமுகவின் அடிமை அரசு தேவையில்லை. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஒரு புதிய அரசு அமைய வேண்டும். அதிமுக பிஜேபி கூட்டணியை வீழ்த்த வேண்டும்”  என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“மோடிக்கு செல்லப் பெயர் வைத்து உள்ளேன்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
I have given a pet name to Modi  Minister Udhayanidhi's speech

இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மணிக்கூண்டில் வேனில் இருந்தபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என நரேந்திர மோடி சொல்லி வருகிறார். நான் சொல்கிறேன் ஆமாம் கலைஞரின் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. இந்த ஒட்டுமொத்த தமிழகமும் கலைஞரின் குடும்பம் தான். மோடி சொல்கிறார் தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பேசி வருகிறார். ஆமாம் தூக்கம் போய் விட்டது உங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. உங்களை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது. உங்களை ஆட்சியிலிருந்து அகற்றாமல் நாங்கள் தூங்கப் போவதில்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா அல்லது மிஸ்டர் 28 பைசாவா என மோதி பார்ப்போமா. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நமது வேலை ஒன்றே ஒன்றுதான். அனைவரையும் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்கை செலுத்தி மோடிக்கு தலையில் மிகப்பெரிய கொட்டு வைத்தாக வேண்டும். வைப்பீர்களா?

கடந்த 10 வருடமாக நரேந்திர மோடி அவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்து உள்ளேன் எடப்பாடி பழனிச்சாமிக்கு நமது முதல்வர்களும் பாதம் தாங்கிய பழனிச்சாமி என்று பெயர் வைத்துள்ளார். அதேபோல நரேந்திர மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்துள்ளேன். மிஸ்டர் 28 பைசா. கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு பக்கம் தலை வைத்து பார்த்ததில்லை. பிரதமர் மோடி கடந்த தேர்தலின் போது மதுரைக்கு வந்து ஒரே ஒரு செங்கலை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக கூறினார். அந்த செங்கல்லையும் நான் எடுத்து வந்து விட்டேன். தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. தேர்தல் வந்ததும் மோடி கடந்த 10 நாட்களாக தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். ஆனால் புயல் அடித்தபோது வரவில்லை. கடந்த டிசம்பர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புயல் வெள்ளம் வந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் களத்தில் நின்று மக்கள் பணி செய்தனர். ஆனால் ஒன்றிய பிரதமர் வரவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். எல்லாத்தையும் பார்த்துவிட்டு காசு தருகிறேன் என கூறினார். ஆனால் முதலமைச்சர் தார்மீக உரிமையில் எங்கள் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 37 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன பணம் கொடுக்கிற மெஷினா என்ன கேள்வி கேட்டார். தமிழகத்தில் வெள்ளம் வந்த போதும், புயல் வந்த போதும் பிரதமர் மோடி எட்டிப் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா என எங்களை கேள்வி கேட்டார். அதற்கு நான் திருப்பி கேட்டேன். இது உங்க அப்பன் வீட்டு பணமா...இது எங்கள் வரிப்பணம் என்று. இது தவறு என்றார். தமிழகத்துக்கு வெள்ளம், புயல் வந்தபோது வராத பிரதமர், தற்போது தேர்தல் என்றதும் ஓடி ஓடிவருகிறார். தேர்தல் வந்ததால் தமிழகத்தை சுற்றி வருகிறார். பாசிச ஆட்சியை விரட்டும் வரை நாம் அனைவரும் தூங்கக் கூடாது”எனப் பேசினார்.