Skip to main content

கேள்விக்குள்ளானால் ஜனநாயகத்தின் அடித்தளமே இழந்து விடும்..! -இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 

 நாட்டின் ஜனநாயக அமைப்பில் நான்காவது நிர்வாகம் தேர்தல் ஆணையம் இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வேண்டியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில குழு இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளது. இக்கடிதத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான முன்னாள் எம்.எல்.ஏ. நா. பெரியசாமி அனுப்பியுள்ளார். 

 

c

 

மேலும் விரிவான அக்கடிதத்தில்    "இந்திய நாட்டின் தேர்தல் ஆணையம் என்பது நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் படி  அதிகாரம் பெற்றுள்ள மிக முக்கியமான அமைப்பாகும். அது நீதித்துறை அடுத்து சட்டமியற்றும் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள்), நிர்வாத்துறையை அடுத்து ஏற்படுத்தப்பட்டுள்ள நான்காவது மிக முக்கியமான ஒரே நிர்வாக அமைப்பாகும். ஆகவே தான் அது நீதி துறையைப் போல் மக்கள் நம்பிக்கையின் ஊற்றாக இயங்க வேண்டியிருக்கிறது.

 

ஆனால் நடைபெற்று வருகிற 17-வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை கடுமையான நெருக்கடியில் சிக்கியிருப்பது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகள் மீறப்படும் அத்துமீறல்கள் அன்றாடம் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் தனது சார்பற்ற நடுநிலை மற்றும் நியாயமான நடவடிக்கைகளை நிலைநாட்ட விரைந்து செயல்பட வேண்டும் .

 

இதற்கான முறையில் அண்மையில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 20 வாக்காளர் வாக்களிப்பு சரிபார்க்கும் இயந்திரங்கள் (விவி பாட்) ஆகியவற்றை கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களுக்கு எதற்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பதற்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. 


கடந்த 07.05.2019 அன்று, பின்னிரவு நேரத்தில் தேர்தல் களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் கவனத்திற்கு தெரிவிக்காமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். இது ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்கும் வலுவான காரணமாகியுள்ளது. 


ஈ வி எம் மற்றும் விவிபாட் தொடர்பான விதித்தொகுப்பு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட ஆவணம் எண் 2, நான்காம் பதிப்பு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்காமல் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இடமாறுதல் செய்யக்கூடாது என தெளிவாக கூறுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகளை இடம் மாற்றியது தொடர்பாக நம்பிக்கை அளிக்கும் விளக்கம் ஏதும் தரவில்லை. இது சந்தேகம் மற்றும் யூக வாதங்களை அதிகப்படுத்தியுள்ளது. 


இந்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் அலுவலர் ஊடகங்களில் பேசிய போது சில வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தும் போது பயன்படுத்த, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இடமாற்றம் செய்யப்பட்டது என்று கூறினார். இது எந்தெந்த வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு? எங்கெங்கு மறுவாக்குப் பதிவுக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன? யார்,யார் கொடுத்த புகார்கள் மற்றும் வேண்டுகோள் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன. 


சட்டவிதிகளுக்கு மாறாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எமது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம். எந்தக் கட்டாயச் சூழல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இடமாற்றம் செய்வதை நிர்பந்தித்தது என்பதற்கு தேர்தல் ஆணையம் ஏற்கத்தக்க வகையில் விளக்கம் அளிக்க வேண்டும்.அதே போல் தமிழ்நாடு தேர்தல் அலுவலர் கூறிய மறுவாக்குப்பதிவு குறித்த நடைமுறைகளையும் விளக்க வேண்டும். 


மேற்குறிப்பிட்ட சம்பவம் எழுப்பியுள்ள கேள்விகள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின்  நம்பிக்கை கேள்விக்கு ஆளானால், அது ஜனநாயகத்தின் அடித்தளத்தை இழந்து விடும். 


இந்தியத் தேர்தல் ஆணையம் தனது மாண்புகளையும், மக்களின் நம்பிக்கைகளையும் காப்பாற்றும் என உறுதியாக நம்புகிறோம்.  இது தொடர்பான நடவடிக்கை விபரங்களை தெரிவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என்ன பதில் தரப் போகிறது?

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Income tax notice to Congress, Communist Party of India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Income tax notice to Congress, Communist Party of India

இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.