Counterfeit case The number of victims is increasing

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இந்தக் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

Counterfeit case The number of victims is increasing

Advertisment

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நீதிபதி கோகுல்தாஸ் சம்பவம் நிகழ்ந்த கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் மற்றும் கல்யான சுந்தரம் ஆகியோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிகிச்சையில் இருக்கும் 10 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.