Skip to main content

மெசேஜ் அனுப்புங்க... வீடு தேடி காய்கறிகள் வரும்... தொடர்பு எண் என்ன தெரியுமா?

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்கள். போலிசார் விதிகளை மீறியவர்களை பிடித்து நூதன தண்டனைகள் கொடுத்து வழக்குகள் பதிவு செய்தாலும் அன்றாடம் விதிமீறல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. 
 

மேலும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிலும் பல இடங்களில் காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை புகார்களாகவும் தெரிவித்துள்ளனர்.
 

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக விலைக்கு காய்கறிகள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை நகர மக்களுக்கு காய்கறிகள் அவர்களின் வீடுகளுக்கே கிடைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

 Vegetables


 

கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை புதுக்கோட்டை நகரில் உள்ள மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தின் கீழ் 9443675038 என்ற எண்ணில் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பினால் அவர்களின் வீட்டுக்கே கூட்டுறவு சங்க ஊழியர்கள் காய்கறிகளை கொடுத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வார்கள். 
 

அதாவது ரூ. 150 மதிப்புள்ள காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ. 100 க்கும் ரூ. 200 மதிப்புள்ள காய்கறித் தொகுப்பு ரூ. 150 க்கும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் நேரிலும் சென்று ஆய்வு செய்தார். 
 

இதே போல கிராமங்களில் உள்ள விவசாயிகளின் காய்கறிகளை அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து வீட்டுக்கு வீடு காய்கறிகள் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் காய்கறிக்காக வீட்டைவிட்டு வெளியே வருவோர் எண்ணிக்கை குறையும் என்று கூறும் விவசாயிகள், இதே போல வாழைப் பழங்கள், பலாப் பழங்கள் உள்ளிட்ட பழங்களையும் கொள்முதல் செய்து விற்பனை செய்தால் விவசாயிகள் நட்டமின்றி வாழலாம் என்கின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.