தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,286 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான்காவது நாளாக தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 1,244 பேர் தமிழகத்தில் உள்ளவர்கள், மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,872 தற்போது அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கரோனாவுக்கு 11,345 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றும் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நான்காவது முறையாக உயிரிழப்பு எண்ணிக்கையானது இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை கடந்து இருப்பது இதுவே முதல் முறை. இதனால் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் மட்டும் இதுவரை 158 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.