Skip to main content

விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் கரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

 

radhakrishnan ias

 

 

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மருத்துவ கல்லூரி டீன் குந்தவி தேவி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

 

கூட்டம் முடிந்த பிறகு சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கரோனா தடுப்பு பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதனால் நோய் கட்டுக்குள் வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சிகளிலும் செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளிலும் அதிகமானவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பாதிப்பு கூடுதலாக ஏற்ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 820 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மருத்துவ உப கரணவசதிகள் தேவையான அளவு உள்ளன. நோயாளிகளை மூன்று விதமாக பிரித்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணிக்கு கூடுதலாக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் நோயாளிகளை முழுமையாக கவனித்து இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

 

radhakrishnan ias

 

கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புது டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகம்பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்திருந்தாலும் அங்கு 12 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இறப்புகளை தடுக்க இந்திய மருத்துவமுறையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் 12 பெண்களுக்கு மகப்பேறு மருத்துவமும் 34 பேருக்கு அறுவை சிகிச்சை பிரசவமும் செய்துள்ளனர். இப்படி சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

 

பணியின்போது இறந்த டாக்டர்கள் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் பணிபுரிந்து உயிரிழந்தவர்களை கணக்கெடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை படிப்படியாக அனைவருக்கும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு கரோனா காரணமாக ஏற்படும் அச்சத்தை போக்கும் வகையில் டெலிபோன் மூலம் அவ்வப்போது 2000 பேருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இதுவரை 25,000 பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.