Skip to main content

கரோனாவை விட கள்ளச்சாராயம் அதிகரிப்பு! திண்டாடும் காவல்துறை!!!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

தமிழகத்தில் தற்போது தினமும் கரோனாவுக்கு மத்தியில் அடுத்து எந்த செய்தி வருகிறதோ இல்லையோ, ஆனால் கள்ளச்சாராயம் காய்க்கும் கும்பலை பற்றியும், அதை அடித்து உடைக்கும் காவல்துறையினரை பற்றியும் கண்டிப்பாக செய்தி வருகிறது. அந்தளவு கள்ளச்சாராயத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மலை மேடுகள், மலை அடிவாரங்கள், தோட்டங்கள், வீடுகள் என கள்ளச்சாராயங்களை காய்ச்சி வருகின்றனா்.

 

  corona - Kanyakumari illict liquor issue



இதில் குமரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் சாராயம் காய்ச்சி வந்த கும்பல்கள் , தற்போது வீடுகளில் பெண்கள் உதவியுடன் குக்கா் கேஸ் அடுப்பு உதவியுடன் சாராயம் காய்ச்சி வருகின்றனா். இதை கண்டுபிடித்து தடுக்கும் விதமாக காவல்துறையும் முமு வீச்சில் இறங்கியுள்ளது.

இந்தநிலையில் இன்று மார்த்தாண்டம் அருகே மாமூட்டுகடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சாராய வாசனை வருவதாக உதவி ஆய்வாளா் சிவசங்கருக்கு அந்த பகுதியில் உள்ளவா்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது சமையலறையில் குக்கா் மூலம் சாராயம் காய்ச்சி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் சுமார் 15 லிட்டா் சாராயத்தை கீழே கொட்டியதுடன் அந்த வீட்டின் உரிமையாளர் பெண் ஷீபா (36), சுரேஷ் (44), மற்றும் ரசல்ராஜ் (66) ஆகிய மூவரை கைது செய்தனா்.

அதே போல் களியக்காவிளை திருத்துவபுரத்தில் பெனடிக் ஆன்றனி தனது வீட்டின் பின்பக்கம் உள்ள கழிவறையின் பக்கத்தில் கேஸ் அடுப்பு மற்றும் குக்கா் மூலம் பழங்களை கொண்டு சாராயம் காய்ச்சி அதை மண்ணுக்குள் ஊற வைத்திருந்தார்கள். இந்த வாசனை அந்த பகுதியில் உள்ளவா்களின் மூக்கை துளைத்ததுடன் அடிமையான குடிமகன்களுக்கு அதுவே போதையும் ஏற்றியது. 
     

இதையடுத்து களியக்காவிளை உதவி ஆய்வாளா் ராஜரெத்தினம் சாராய ஊறல்களை வெளியே எடுத்து கீழே கொட்டியதுடன் பெனடிக் ஆன்றனியையும் கைது செய்தனா். இதே போல் குமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து வீடுகளில் சாராயம் தயாரிப்பது அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்புக்கு நடுவே இதை கட்டுப்படுத்த காவல்துறை திண்டாடி வருகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.