தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் 30-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,992 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 82,275 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 35,656 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 1,443 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,537. சென்னையில் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி இன்று 54 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 44 பேரும், தனியார் மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் இன்று கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,079 அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் இன்று ஒரே நாளில் 248 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 நாட்களில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. தற்பொழுது அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ளது. தற்போது வரை 1,435 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு என்பது 5,073 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் அதிகபட்சமாக 75 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 2,589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பூந்தமல்லியில் 21 பேருக்கும், ஆவடியில் 18 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,520 அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 2,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் திருவள்ளூரில் செங்கல்பட்டிற்கு அடுத்தபடியாக கரோனாவிற்கு 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் வேலூரில் இன்று ஒரே நாளில் 126 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வேலூரில்11 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை 1,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 357 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் இன்று ஒரே நாளில் 63 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவமனையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு 468 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நான்கு பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இன்று 63 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டுள்ளதால் ராமநாதபுரத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 711 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் தேனியில் ஒரே நாளில் 58 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தேனியில் 2 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 418 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 571 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் திருவாரூரில் மேலும் 16 பேருக்கு கரோனா பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்னிலம், பேரளம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய காவலர்கள் 5 பேர் உட்பட மேலும் 16 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது.