Skip to main content

கரோனா பற்றி கவலைப்படாமல் மீன்பிடித் திருவிழா நடத்திய கிராம மக்கள்...

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

 sendurai nakkambadi village -


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது நக்கம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பாசனை ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் மழைக்காலங்களில் நீர் பிடிக்கப்பட்டு பாசனத்திற்குத் திறந்து விடப்படும். பிறகு ஏப்ரல், மே மாதங்களில் ஏரி தண்ணீர் குறைந்து விடும். அப்போது ஏரியில் மீன்கள் நிறைய வளர்ந்து இருக்கும் அந்த மீன்களைப் பிடிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் இந்த ஏரியில் மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
 


ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகவும் அரசின் 144 தடை உத்தரவின் காரணமாகவும் மீன்பிடித் திருவிழா நடத்துவது தடை செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த மூன்றாம் தேதி நக்கம்பாடி, செந்துறை, சொக்கநாதபுரம், வஞ்சனபுரம், நல்ல நாயகபுறம், நம்ம குணம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் நக்கம்பாடி ஏரியில் அரசு அனுமதியின்றி இறங்கி மீன்பிடித் திருவிழா நடத்தினார்கள்.

இந்தத் தகவல் செந்துறை காவல்நிலையத்திற்குத் தெரிய வந்ததும் உடனடியாக போலீஸார் நக்கம்பாடி ஏரிக்கு விரைந்து சென்றனர். மீன்பிடிக்க ஏரிக்குள் குவிந்திருந்த மக்களைக் கலைந்து போகும்படி எச்சரித்தனர். அரசு 144தடை விதித்துள்ளது. கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் இப்படிக் கும்பல் கூடுவது சட்டப்படி தவறு என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி மக்கள் மீன்பிடிப்பதில் தீவிரமாக இருந்தனர். போலீசார் அந்த மக்களிடம் கடுமை காட்டி ஏறியைவிட்டு வெளியேற்றினர்.
 

 


நக்கம்பாடி ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெறுவதைக் கேள்ளிப்பட்டு அக்கம் பக்க கிராம மக்கள் மீன் பிடிப்பதற்காக வந்தனர்.போலீசார் அனைவரையும் தடுத்துத் திருப்பி அனுப்பி வைத்தனர். இருந்தும் அன்று மாலை நக்கம்பாடி சிவன் கோவில் குளத்தில் அந்த ஊர் மக்கள் மீன்பிடித் திருவிழா நடத்தியுள்ளனர்.

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தபடியே உள்ளது. மேலும் செந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் ஏற்கனவே கரோனா தொற்று ஏற்பட்டு பலர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். அதன் பிறகு சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் பல்வேறு கிராமங்களில் கரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
 

http://onelink.to/nknapp


இப்படி இப்பகுதியில் மேலும் நோய்ப் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்காக அரசு அதிகாரிகளும், காவல்துறை, சுகாதாரத்துறை தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில் மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அலட்சியப்போக்குடன் மீன் பிடிப்பது அதிகாரிகள் மத்தியில் கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சேற்றில் குளித்து சிலம்பம் சுற்றி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்.. வியக்க வைக்கும் திருவிழா!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

தமிழர்களின் ஒவ்வொரு திருவிழாக்களும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். கோடை வெயிலின் வெக்கையை சமாளிக்க திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதே போல விதை நேர்த்தி செய்ய முளைப்பாரித் திருவிழாக்கள், காடுகள், வனங்களை பாதுகாக்க வன கடவுள்களை வணங்கினார்கள். இப்படி அத்தனை விழாக்களும் அர்த்தமுள்ள விழாக்களாக தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இப்படி ஒரு திருவிழா தான் தமிழக மக்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடு செலுத்தும் திருவிழா.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கள் பல நாட்கள் நடக்கும். தீ மிதி, பால்குடம், காவடி என ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா ஊர்வலத்திற்கு முன்பு ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் தீ பந்தங்கள் தூக்கிச் செல்ல பெண்களின் கும்மியாட்டத்தோடு வீதி உலா நடக்கும். ஒவ்வொரு நிகழ்வுடன் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.பொங்கல் நாளில் சுமார் 100 கிராம மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து படையலிட்டு உறவினர்களை எல்லாம் அழைத்து விருந்து படைப்பார்கள். திருவிழாவின் கடைசி நாளில் தான் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அம்மனை வணங்கி ‘நாடு செலுத்தி’ செல்லும் நிகழ்வு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் திருவிழாவாக அமையும்.

பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செய்பூதி நாடு என 4 நாடுகளுக்கு கீழ் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உண்டு. இந்த திருவிழாவில் ஜாதி பாகுபாடு பறந்துவிடும். ஒவ்வொரு நாட்டில் இருந்து கிராம மக்கள் திரளாக ஊர்வலமாக வந்து அம்மனை வணங்கிச் செல்வர். சிலர் குதிரையில் ஏறிவந்து செல்வர். அதே திருவிழாவில் ஆலவயல்நாடு ‘நாடு செலுத்தும்’ நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசமானதாக உள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்றும் பக்தர்கள் ஒரு நாள் பழந்தமிழனாகவே மாறிவிடுகிறார்கள். பலரும் கடவுளிடன் தங்கள் வேண்டுதலை முன்வைத்து நினைத்த காரியம் முடிந்தால் இதை செய்கிறேன் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் இங்கு நான் சேற்றில் குளித்து வந்து தரிசனம் செய்கிறேன் என்று நேர்த்திக்கடன் வைத்திருப்பார்கள்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

நாடு செலுத்தும் முதல் நாளில் ஒரு கண்மாயில் தண்ணீர் விட்டு நன்றாக சேற்றை குழப்பி வைத்துவிடுகிறார்கள். நாடு செலுத்தும் நாளில் நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள், சிறுவர்கள் நன்றாக குழப்பிய சேற்றில் குளித்து உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு தலையில் பறவைகளிக் இறகுகள், உடலில் பஞ்சுகள் ஒட்டிக் கொண்டு கைகளில் வேல் கம்புகளுடன் சிலம்பமாடி வருவதை காணவே பல ஆயிரம் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். இவர்களுக்கு முன்னால் ஆலவயல் நாட்டார் பதாகையுடன் செல்ல பின்னால் செல்லும் அனைவரும் சிலம்பத்துடன் செல்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட முகூர்த்தக்கால்கள், வேல்கம்புளும், கும்மியும் காணப்படுகிறது. கோயிலலைச் சுற்றி வந்து உள்ளே சென்று வணங்கி செல்கின்றனர்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

இது குறித்து, அங்குள்ள இளைஞர்கள் கூறும் போது, “திருவிழாக்கள் நம் முன்னோர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் எந்த ஜாதி பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து ஜாதியினரும் கலந்து கொள்வதுடன் தங்கள் உறவினர்களையும் அழைத்து வருவார்கள். அப்படித்தான் நாடு செலுத்துதல் விழாவும். நேர்த்திக்கடன் செலுத்த சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டு போவார்கள். பார்க்க பழங்குடிகளாகவே தெரியும். சேற்றில் குளித்தால் உடலில் தோல் நோய்கள் பறந்து போகும். அதனால் தான் நம்முன்னோர்கள் கோடையில் வரும் தோல் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சேற்றுக் குளியல் திருவிழாவில் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரம் வரை அந்த சேரு நம் உடலில் இருப்பதால் நம் உடம்பில் உள்ள தோல் நோய்கள் பறந்து போகிறது. அந்த மருத்துவத்தை திருவிழாவாக செய்வதால் ஏராளமானோர் வந்து கலந்து கொள்கிறார்கள். இன்றும் பல மேலை நாடுகளில் இந்த சேற்றுக் குளியலை பணத்திற்காக மருத்துவமனைகளில் செய்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் பணமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் திருவிழாவாக செய்கிறோம்” என்றனர்.