Skip to main content

சேலத்தில் 26 பேருக்குக் கரோனா நோயைப் பரப்பிய 'வெள்ளி' தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

corona

 

சேலத்தில், ஒரே தெருவில் 26 பேருக்கு கரோனா நோய்த்தொற்றைப் பரப்பியதாக வெள்ளித் தொழில் அதிபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


சேலம் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை என ஒட்டுமொத்த நிர்வாகமும் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன.


குறிப்பாக, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வருபவர்களில் சராசரியாக 40 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது இதுவரையிலான பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.


வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்குள் நுழைபவர்களை கருப்பூர் சோதனைச் சாவடியில் காவல்துறை மூலம் தணிக்கை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், பலர் திருட்டுத்தனமாக இ-பாஸ் இல்லாமல் கிராமச் சாலைகள் மூலமாக மாநகருக்குள் நுழைந்து விடுகின்றனர்.


அவ்வாறு குறுக்கு வழியில் நுழைபவர்கள் மூலம் நோய்த்தொற்று அபாயம் இருப்பதால், அதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அல்லது சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும்படி மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 


இது ஒருபுறம் இருக்க, சேலம் மாநகராட்சி 46ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட தாதகாப்பட்டி ஸ்ரீரங்கன் தெருவில் 40 வயதுள்ள வெள்ளித் தொழில் அதிபர் ஒருவர், மஹாராஷ்டிராவில் இருந்து சேலம் வந்திருப்பதாகவும், ஆனால் அவர் தன்னை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.


அதன்பேரில் சந்தேகத்திற்குரிய நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைச் சொன்னார். வெள்ளி வியாபாரம் தொடர்பாக மஹாராஷ்டிராவுக்குத் திருட்டுத்தனமாகச் சென்றுவிட்டு அங்கிருந்து இ-பாஸ் இல்லாமல் சேலம் வந்திருப்பது தெரிய வந்தது. 


இதையடுத்து அவருக்கும், குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வெள்ளித் தொழில் அதிபர், அவருடைய மனைவி மற்றும் குழந்தைள் உள்பட 4 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


விசாரணையில் வெள்ளித் தொழில் தொடர்பாக அதே தெருவில் உள்ள சில வெள்ளிப் பட்டறை உரிமையாளர்களை நேரில் சந்தித்துப் பேசியதும் தெரிய வந்தது. இதனால் அந்தத் தெருவில் உள்ள 80 வீடுகளில் வசிக்கும் 120 பேருக்கு கரோனா கண்டறியும் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த ஒரே தெருவில் மட்டும் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 


இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அதிகாரிகள், தொற்று கண்டறியப்பட்ட அனைவரையும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்தத் தெருவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தெருவிற்குள் செல்லும் எல்லா வழிகளும் தடுப்புக்கட்டைகள் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டன. அங்குள்ள மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். 

 

http://onelink.to/nknapp


நோய்த்தொற்றாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் யார் யாரைச் சந்தித்தார்கள், எங்கெல்லாம் சென்றார்கள் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


இதற்கிடையே, இ-பாஸ் இல்லாமல் திருட்டுத்தனமாகச் சேலத்திற்கு நுழைந்ததுடன், அதுகுறித்த தகவல்களை மறைத்தது மற்றும் மிகப்பெரிய அளவில் கரோனா நோய்ப் பரவலுக்கு காரணமாக இருந்ததாக அந்த வெள்ளித் தொழில் அதிபர் மீது மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்தது. அதன்பேரில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் வெள்ளித்தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


வெள்ளித்தொழில் அதிபர் மற்றும் ஸ்ரீரங்கன் தெருவில் உள்ள நோய்த் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.