Skip to main content

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் 25 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றி!- மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்!!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

contract employees has been permanented nlc announced employees happy

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், மூன்று திறந்தவெளி சுரங்கத்தின் மூலமாக நிலக்கரி வெட்டப்பட்டு, அனல்மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

என்.எல்.சி. நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் முதல் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு, பஞ்சப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

 

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் என்.எல்.சி. நிர்வாகம் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்கள் என அனைவருக்கும் பஞ்சப்படி, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டது.

 

அதன் அடிப்படையில், பேச்சுவார்த்தைக்கு பின்பு என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, பஞ்சப்படி உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. மேலும் பேச்சுவார்த்தையின்படி ஆண்டுக்கு 750 தொழிலாளர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டதால்,  2021-ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த மற்றும் சொசைட்டி (society) தொழிலாளர்களில், சீனியாரிட்டி அடிப்படையில், 750 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கான அட்டவணையை என்.எல்.சி. நிர்வாகம் வெளியிட்டது. 

 

பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் உடல் தகுதி பரிசோதனைக்குப் பின்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறும் தொழிற்சங்க நிர்வாகிகள், "25 ஆண்டு கால தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றியாக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் பணி நிரந்தரம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ரூ.48 கோடியில் 504 அடுக்குமாடி குடியிருப்பு; பயனாளிகளிடம் ஒப்படைத்த அமைச்சர் 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Minister Anbarasan handed over 504 flats constructed in Neyveli block to the beneficiaries

நெய்வேலி சமத்துவபுரம் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என  தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் மற்றும்  நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர்  ஊரகத் தொழில் துறை அமைச்சர்  தா.மோ அன்பரசனிடம் கோரிக்கை வைத்தனர். 

இதனையெடுத்து  400 சதுர அடி கொண்ட 3 அடுக்குகளில் 504 குடியிருப்புகள்  ரூ 48.6 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட குடியிருப்புகளை  பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான சாவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் மாநிலத்தில் குடிசையற்ற வீடுகள் இருக்க வேண்டும் என்ற  நோக்கில் முன்னாள் முதல்வர் கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி  விடற்ற ஏழைகளுக்கு  வீடுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து  தற்போதைய முதல்வர் அத்துறையை நகர்ப்புற வாழ்விடம் மேம்பாடு வாரியம் என மாற்றி தற்போது வீடற்றவர்களுக்கு வீடு வழங்கி வருகிறார். அதை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மாவட்டத்தில் ஏழைமக்கள் குடிசை வீடுகளில் மிகவும் மோசமான நிலையை கணக்கில் எடுத்து அவர்களுக்கும் இதுபோன்ற வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசினார். நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் இப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட குடியிருப்புகளை இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். பயனாளிகள் விரைந்து விண்ணப்பித்து வீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Minister Anbarasan handed over 504 flats constructed in Neyveli block to the beneficiaries

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இத்திட்டம் பயனாளிகளின் பங்களிப்புடன் கூடியது. பயனாளிகள் இந்த மாவட்டத்தை சேர்ந்தவராகவும் தனது பெயரில் பட்டா, வீடு இல்லாமலும்  மாத வருமானம் ரூ 25000 க்கு மிகாமல் இருத்தல்  வேண்டும்.  இதில் மாநில அரசு  ரூ.  6 லட்சமும் மத்திய அரசு  ரூ 1.5 லட்சமும், பயனளி பங்காக ரூ . 2 லட்சம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை 105 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 230 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. பயனாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வங்கிக் கடன் செய்து தரப்படும் என்றார்.

இந்நிகழ்வில் பண்ருட்டி ஒன்றியக் குழு தலைவர் சபா.பாலமுருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன் உள்ளிட்ட  வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
CITU union protest against NLC

நெய்வேலியில் உள்ள என்எல்சி நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு குளறுபடிகளைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் மெயின் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் ஜெயராமன் மற்றும் பொதுச்செயலாளர் அரசு ஆகியோர் போராட்டம் குறித்துப் பேசுகையில், “என்எல்சி நிறுவனத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர், பொறியாளர், அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான விடுப்புதான் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சென்ற மாதம் திடீரென பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ‘ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்ற நிர்வாகத்தின் இந்நடவடிக்கை தொழிலாளர் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்தில் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையை பயன்படுத்துபவர்களை தவிர்த்து சுரங்கம் மற்றும் தெர்மல் பகுதியில் 3 ஷிப்ட் ஆபரேஷனில் பணியாற்றுபவர்களுக்கு 8 நாட்களும், மூன்று ஷிப்ட் மெயின்டணன்ஸில் பணியாற்றுபவர்களுக்கு 7 நாட்களும் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் 6 நாட்கள் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மேற்கண்ட விடுப்பு Earn Leave அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வரை சுரங்கத்தில் பணியாற்றிய ஆப்ரேஷன் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 3 நாள், மெயின்டனன்ஸ் மற்றும் NSU, தெர்மல் பகுதி தொழிலாளர்களுக்கு 2 நாள் என C-Off வழங்கப்பட்டு வந்தது. 2015 ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்ட பிறகு OH விடுப்பு 5 நாட்கள் தொழிலாளர் - பொறியாளர் - அதிகாரிகளுக்கு சமமாக வழங்கப்பட்டது. C-Off பொறியாளர்களுக்கு கிடையாது.

ஊதிய உயர்வு மற்றும் UIS ஒப்பந்தம் கூட 2017 முதல் தொழிலாளர் - பொறியாளர்-அதிகாரிகளுக்கு ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை பர்னிச்சர் கடன் அநியாயமாகும். ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் - பொறியாளர் மத்தியில் வித்தியாசத்தையும், பேதத்தையும் ஏற்படுத்திடும் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

சில மாதங்களுக்கு முன்பு பர்னிச்சர் கடன் கொடுக்கப்பட்டது முதல் இன்று வரை பேச்சுவார்த்தையிலுள்ள சங்கங்கள் வாய்மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்ன? தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள விடுப்பு, பர்னிச்சர் லோன் உள்ளிட்டவைகளை பெறுவதற்கு ஏன் குரல் எழுப்பவில்லை. பேச்சுவார்த்தை சங்கங்களின் இந்த மௌனம் தொழிலாளர்களை வேதனை அடைய செய்துள்ளது.

எனவே இரண்டாம் சனிக்கிழமை விடுமுறைக்கு பதிலாக அளிக்கப்படும் ஸ்பெஷல் அடிஷனல் லீவை 12-ஆக அளித்திடு! பர்னிச்சர் லோன், லேப் டாப், மொபைல் போன் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிடு! மிகை நேர பணிக்கு சி ஆப் வழங்கிடு என வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் - ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

வெளிமாநில இடமாற்றம்: நிறுவனத்தில் தொழிலாளர் - ஊழியர்களை பொறுத்தவரையில் நெய்வேலிக்கு வெளியே இடமாற்றம் செய்யும் நடைமுறை கிடையாது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு 6 பேர் வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை பேச்சுவார்த்தை சங்கங்கள் தட்டிக் கேட்காமல் இருப்பது மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடும். வரும் காலத்தில் நிர்வாகம் தொழிலாளர்களை வெளி மாநிலங்களுக்கு பந்தாடுவதற்கு வழிவகுத்திடும் என்று சிஐடியு எச்சரிக்கை விடுக்கிறது. 60 ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை தொடர்ந்திட வேண்டும் எனவும், போடப்பட்டுள்ள வெளிமாநில இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது” என்றார்.