Skip to main content

வாய்கால் உடைந்து மூழ்கிய கிராமங்கள்... அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!  

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியதால் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக  விநாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாசனப்பகுதி விவசாயிகள் இந்நீரை பயன்படுத்தி நெல் பயிரிட்டுள்ளனர். வாய்க்காலில் 2300 கனஅடி நீர் இருகரைகளை தொட்டபடி செல்கிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் சத்தியமங்கலம் அடுத்துள்ள மில்மேடு பகுதியில் உள்ள சுள்ளித்தோட்டம் என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலின் இடதுபுற கரை திடீரென  உடைந்து அதிலிருந்து வெளியேறிய  தண்ணீர் அருகே உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்தது.

 

continuous rain in erode

 

இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பவானிசாகர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வந்த  பொதுப்பணித்துறை அதிகாரிகள் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தினர். இந்நிலையில் இந்த நீர் அப்பகுதியில் உள்ள சுள்ளித்தோட்டம், கேத்தம்பாளையம், சின்னபீளமேடு, தட்டாம்புதூர், சுண்டக்காம்பாளையம், நாகரணை கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து தாழ்வான பகுதியில் உள்ள பள்ளங்கள் மற்றும் நீரோடைகள்  வழியாக தண்ணீர் பவானி ஆற்றிற்கு சென்றது. 70 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அப்பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

 

continuous rain in erode

 

மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து உக்கரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கேத்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் தண்ணீர் புகுந்ததால் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் வைத்து அடுக்கி உடைப்பை சரிசெய்வதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும் தண்ணீர் செல்லும் பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் விழுந்ததால் நேற்றுமுன்தினம் மாலை முதல் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டுள்ளது. கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஈரோடு கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு செய்து உடைப்பை சரி செய்வது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

continuous rain in erode


இதைத்தொடர்ந்து கலெக்டர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.
 

கீழ்பவானி வாய்க்கால் கரையில் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. கரை உடைந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 2 நாட்களில் கரை உடைப்பு சரி செய்யப்படும். இன்னும் சில மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடும். பின்னர் மணல் மூட்டைகள் மற்றும் மூங்கில் கழிகளால் கரை உடைப்பு சரிசெய்யப்படும். வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் "  என்றார்.

 

continuous rain in erode

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை வாய்காலின் கரை உடைந்தது இந்த கரை உடைப்புக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பாசனப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலில் தண்ணீர் திறப்பிற்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்காலின் இருபுறத்தில் உள்ள கரைகளை ஆய்வு செய்து மண்சரிந்துள்ள இடங்களில் கரையை பலப்படுத்திய பின்பு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாய்க்கால் கரை ஆய்வு செய்வதில்லை. ஆய்வு செய்தது போல் கணக்கு காட்டி விடுவார்கள். அணை கட்டப்பட்டு வாய்க்கால் வெட்டி 64 ஆண்டுகள் ஆகியும் இதுபோல் ஒருமுறை கூட கரை உடைப்பு ஏற்படவில்லை. அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் உள்ளதால் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டதாகவும் இனிமேலாவது கரைகளை ஆய்வு செய்து கரை சேதமடைந்த இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்சேதத்தை கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என பாசனப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.