Skip to main content

தொடரும் ஆடு திருட்டுகள்... அலறும் விவசாயிகள்...

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

Continued theft of goats... Screaming farmers...

 

 

தமிழகம் முழுவதும் ஆடுகள் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆடு திருடர்களை பிடிக்கச் சென்ற போலீசார் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து சில மாதங்கள் கடுமையான ரோந்துப் பணிகளும், தனிப்படைகளும் அமைக்கப்பட்டு திருடப்பட்ட ஆடுகள் மீட்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் ஆடுகள் திருட்டு தலைதூக்கி இருக்கிறது.

 

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியில் மொத்தமாக திருடப்பட்ட ஆடுகளை மீட்க முடியாமல் போலீசார் திணறிய போது, அதேகும்பல் மீண்டும் ஆடு திருட இடம் பார்க்க வந்த போது பிடிபட்டது. அவர்களிடம் இருந்து ஆடுகளும் மீட்கப்பட்டன. வடகாடு காவல் சரகம் நெடுவாசல் மேற்கு அரணமனைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வீட்டில் நின்ற 2 ஆடுகள், திருமேனி என்பவர் வீட்டில் 2 ஆடுகள் என 4 ஆடுகள் வெள்ளிக்கிழமை இரவு காணாமல் போனது. அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் ஒரு ஆடு நேற்று இரவு காணாமல் போனது. இதுகுறித்து 3 பேரும் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

 

கடந்த சில வாரங்களில் வடகாடு பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டுள்ளன. அதேபோல் கீரமங்கலம் காவல் சரகம் குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ராஜகுமாரி வளர்த்த 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கிராமப்புற ஏழை விவசாயிகளின் வாழ்வாதரத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகள் தொடர்ந்து திருடப்படுவதால் கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் தனிப்படைகள் அமைத்து ஆடு திருடர்களை கண்டுபிடித்தால் மட்டுமே ஆடு திருட்டுகளை தடுக்க முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.