Skip to main content

எடப்பாடிக்காக அல்ல! அ.தி.மு.க ஆட்சி தொடர்வதற்காக! -பறந்துவந்து ஆண்டாள் கோவிலில் ஹோமம் நடத்திய ‘பாசறை’ நிர்வாகி!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

To continue the AIADMK rule! -The administrator of ‘Pasarai’ conducted the homage at Andal temple

 

‘யாகம்கிறாங்க.. பூஜைங்கிறாங்க.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதற்கு சிறப்பு வழிப்பாடுங்கிறாங்க..’ ‘எங்கே? எதற்காக?’ என்று கேட்டால், “அதுவந்து.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபு, இன்னைக்கு குடும்பத்தோடு வந்தாருல்ல.. அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து தனி ஹெலிகாப்டர்ல.. எல்லாம் ஒரு வேண்டுதலுக்காகத்தான்..” என்கிறார்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆளும் கட்சியினர்.


சில நாட்களுக்கு முன், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., அதன்பிறகு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என, தொடர்ந்து ஆண்டாள் கோவிலில், சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டதும், தற்போது விஷ்ணுபிரபுவும், குடும்பத்தோடு தனி ஹெலிகாப்டரில் வந்து, வழிபாடு நடத்திவிட்டுச் சென்றதும், பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.  


அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபுவை தொடர்பு கொண்டோம். “2011-இல் இருந்து தமிழகத்தில் அம்மா ஆட்சிதான் நடக்குது. 2021-லும் அம்மா ஆட்சியே தொடரணும்னு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுதர்ஸன ஹோமம் நடத்தினோம். அன்னதானத்துக்கும் ஏற்பாடு பண்ணுனோம். அவ்வளவுதான். அடுத்த முதல்வர் வேட்பாளர் யாருங்கிறது,  கட்சி முடிவு பண்ணுற விஷயம். அதுக்குள்ள நான் போக விரும்பல.” என்று முடித்துக்கொண்டார். 


நான்கைந்து பேர் மட்டுமே பயணம் செய்ய முடியுமென்பதால், விஷ்ணுபிரபுவுடன் அவரது குடும்பத்தினர் மட்டும் ஹெலிகாப்டரில் வந்திருக்கின்றனர். கோயம்புத்தூரிலிருந்து கட்சியினர், முன்கூட்டியே காரில் வந்துவிட்டார்கள். இது ஒருபுறம் இருக்க.. அமரராகிவிட்ட ஜெயலலிதா படத்தைக் கோவிலில் வைத்து ஹோமம் நடத்தியது, அப்பட்டமான ஆகம விதிமீறல் என்கிறார்கள், ஆண்டாள் பக்தர்கள். 

 

Ad


சிறிய ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில், தனி ஹெலிகாப்டரில் வந்திறங்கி, வழிபாடு செய்தால், பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கும் என்பதை, விஷ்ணுபிரபு நன்றாகவே அறிந்து வைத்திருப்பார் போலும்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.