Skip to main content

காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காததால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Consumer court orders compensation to farmers for non-payment of insurance premium

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் மனைவி சரவணசுந்தரி (வயது 40), கணேசன் மனைவி பத்மபிரியா (வயது 45). இவர்கள் இருவருக்கும் சொந்தமாக தலா இரண்டு ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அந்த விளைநிலத்திற்கு 'பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 369 வீதம் இரண்டு ஏக்கருக்கு ரூபாய் 738 என சரவணசுந்தரியும், பத்மபிரியாவும் காப்பீட்டு பிரீமியமாக செலுத்தினர். கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 18,142 ரூபாய் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் சரவணசுந்தரிக்கும், பத்மபிரியாவுக்கும் ஒரு காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

 

இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கிடையில் வழக்கு நிலுவையில் இருந்தபோது சரவணசுந்தரிக்கு காப்பீட்டு நிறுவனம் 35,256 ரூபாய் காலம் தாழ்த்தி வழங்கியது. மீதி தொகையான ரூபாய் 1,136 வழங்கவில்லை. மேலும் அதற்கு எவ்வித காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை.


இவ்வழக்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

 

அதில், காப்பீட்டு நிறுவனம் சரவணசுந்தரிக்கு காலதாமதமாக காப்பீட்டுத்தொகை வழங்கியுள்ளதால் நுகர்வோர் சேவை குறைபாடாக கருதப்படுகிறது. அதனால் காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டிய மீதித் தொகையான ரூபாய் 1,136 மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 25 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 2000 ஆகியவற்றை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

 

இதேபோல் பத்மபிரியாவுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் காப்பீட்டு நிறுவனம் ரூபாய் 36,284 இழப்பீட்டுத் தொகையையும், ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு பாதிப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்கு ரூபாய் 25 ஆயிரமும் நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 5000 ஆகியவையை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 


இதேபோல் நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரிந்து வந்த காமராஜ் என்பவர் தபால் துறையில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டில் சேர்ந்து மாதாமாதம் தன்னுடைய சம்பள கணக்கில் இருந்து என்.எல்.சி நிறுவனம் பிடித்தம் செய்யும் 3 சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளார். 3 பாலிசியில் ஒரு பாலிசி தொலைந்து விட்டதால் அதன் நகலை வழங்க வேண்டுமென தபால் துறையை அணுகினார். தொலைந்த பாலிசி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு ஊழியரான பாலசுப்பிரமணி என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. 


உடனே காமராஜ் தபால் துறையை தொடர்பு கொண்டு தான் மாதந்தோறும் 1150 ரூபாய்  சுமார் ஆறு வருடங்களுக்கு பிடித்தம் செலுத்தப்பட்ட தொகை ஆன 66,700  வட்டியுடன் கொடுக்க வேண்டும் என கேட்டபோது தபால் துறையினர் என்.எல்.சி நிர்வாகம் தவறான தொகையை பிடித்து வங்கியில் செலுத்தினால் தாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து காமராஜ் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையீடு தாக்கல் செய்தார். 


இதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் சேவை குறைபாடாக கருதி முதலீட்டாளர் காமராஜர் செலுத்திய தொகை 66,700 ரூபாய் அதற்குண்டான 9 சதவீத வட்டியுடன் டிசம்பர் 2009ல் இருந்து, இரண்டு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என்றும் முதலீட்டாளர் காமராஜக்கு ஏற்பட்ட மன உளைச்சல் பாதிப்பிற்கு இழப்பீடாக 25 ஆயிரம் வழக்கு செலவுத் தொகையாக 10,000 என மொத்தம் ஒரு லட்சத்து 1,01,700 வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.