Skip to main content

வீராணம் ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்! 

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

Consultation meeting on opening water for irrigation in Viranam Lake!

 


சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்திற்கு சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், உதவி கோட்ட பொறியாளர்கள் சிதம்பரம் ஞானசேகரன், அணைக்கரை குமார், உதவி பொறியாளர்கள் ரமேஷ், வெற்றிவேல், புகழேந்தி, முத்துகுமார், சிவராஜ் உள்ளிட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் கீழணை பாசன சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ராதா வாய்க்கால் பாசன சங்கம், கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கம், நாரைக்கால் வாய்க்கால் பாசன சங்கம், வடரெட்டை பாசன சங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாசன வாய்க்கால் சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் தற்போது சம்பா நடவு பணிக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கீழணையை கட்டிய கீழணையில் ஆதார் காட்டன் மற்றும்  வீராணம் ஏரியில் வீராணம் ஏரியை வெட்டிய ராஜதித்தன் ஆகியோருக்கு சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாய சங்க தலைவர்கள் மனு அளித்தனர். மேலும் பல இடங்களில் வாய்க்கால் தூர் வாராமல் உள்ளது என்றும் அதனை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயச் சங்கத் தலைவர்கள் கோரிக்கை வைத்து பேசினர். இதற்கு பதில் அளித்த செயற்பொறியாளர் காந்தரூபன் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் அணைக்கரையில் ஆதார் காட்டன் சிலையும் வீராணத்தில் ராஜதித்தன் சிலையும் வைக்க அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறினர்.

 

இதனை தொடர்ந்து தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தேதி கிடைத்தவுடன் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து 12ஆம் தேதிக்குள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இதனை அனைத்து விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், ராமச்சந்திரன், இளங்கீரன், விநாயகமூர்த்தி, ரங்கநாயகி, கண்ணன், தம்புராமச்சந்திரன், சத்தியநாரயணன், கற்பனைச்செல்வம் உள்ளிட்ட அனைத்து பாசன வாய்க்கால்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.