Skip to main content

“சென்னைக்கு விமான நிலையம் அவசியம்தான், ஆனால் காங்கிரஸ் இதை கூறவில்லை” - கே.எஸ் அழகிரி

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

congress tamilnadu leader ks alagiri talk about paranthur airport

 

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான கலந்த ஆலோசனை கூட்டமானது திருச்சி மண்டல அளவில் நடைபெற்று வருகிறது.

 

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, எம்பி திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பயணத்தில் எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து மக்களின் பங்களிப்பாக உண்டியல் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில், "ராகுல் காந்தியின் நடைபயணம் இனம், மொழி, ஜாதி என்று பிரித்து பார்க்காமல் மக்களின் நல்லிணக்கத்தை  மட்டுமே கருத்தில் கொண்டு இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு ஒவ்வொரு மக்களின் வங்கிக் கணக்கிலும் கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் பணம் போடுவதாக வாக்குறுதி அளித்தது. தவறான பொருளாதார கொள்கையால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி அதிகமாகியுள்ளது. மத்திய அரசு, பொதுமக்கள் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதையும், எதை உண்ணக்கூடாது என்பதையும் பட்டியல் செய்கிறது" என்று குற்றம்சாட்டினார்.

 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில்  இருந்தபோது மக்களுக்கு கொடுக்கப்பட்ட அரிசி 2 ரூபாய்க்கும், கோதுமை 1 ரூபாய்க்கும் விநியோகம் செய்தது. பாஜக அரசு அப்படிப்பட்ட அரிசி, கோதுமைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது கொடுமையானது. அதே போல் ரயில்வே கட்டணத்தில் ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில் உட்பட தமிழகத்திற்கு என்று எந்த ரயில்களும் கொடுக்கப்படவில்லை.

 

வருகிற 2047 இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று மோடி கூறுகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த பதிலளித்த அவர், "தற்போதைய பொருளாதர நிலை மிகமோசமாக இருக்கும் நிலையில் வருகிற 2047 -ல் எப்படி வேண்டுமானாலும் பொருளாதாரம் இருக்கலாம். ஆனால் தற்போது பொதுமக்கள் வாழ்க்கை தரத்திற்க்கு  ஏற்றவாறு பொருளாதாரத்தை கொடுப்பதுதான் மத்திய அரசின் கடமை" எனப் பதிலளித்தார். 

 

குலாம் நபி ஆசாத் இருந்து வெளியேறும் போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைவர் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, "எப்போதும் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேறும் போது விஷத்தை கக்கிவிட்டு தான் செல்வார்கள் அதுபோலத்தான் இதுவும் ஒன்று" என்றார்.

 

மேலும், ராகுல் காந்தியின் நடைபயணம் கன்னியாகுமரியில் இருந்து துவங்குவது எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. கடைக்கோடியிலிருந்து ஆரம்பிப்பதுதான் முறையானது. இலங்கையில் இருந்தோ, வங்காளதேசத்தில் இருந்தோ ஆரம்பிக்க முடியாது. அதேபோல் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் மோடி பாஜகவின் தலைவர் இல்லை. அதேபோல் காந்தியும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருந்தது இல்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தினார். அதே போல் காங்கிரஸ் கட்சியில் தலைவராக வருவாரா, வர மாட்டாரா என்ற விவாதம் தேவையில்லை" என்றார்.

 

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், துப்பாக்கியால் சுட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கர் புல் பறவையின் மீது பறந்து சென்று இந்தியாவை பார்த்தார் என்று உள்ளதே என்ற கேள்விக்கு, தினத்தந்தி பத்திரிகையில் வரும் சிந்துபாத் கதையை படித்து விட்டு எழுதி இருப்பார்கள் என்று கிண்டலடித்தார். அதேபோல் விவசாயிகளுக்கு என்று கொண்டு வந்த காப்பீடு திட்டம் என்பது படு தோல்வியை சந்தித்துள்ளது. பணக்கார விவசாயிளுக்கு மட்டுமே இந்த காப்பீடு செல்கிறது. அதிலும் குறிப்பிட சில மாநிலங்களுக்கு மட்டுமே சென்றடைகிறது. ஏழை விவசாயிகள் இந்த காப்பீடு திட்டம் சென்றடையவில்லை. திமுக ஆட்சி செய்து வரும் இந்த ஆண்டு வரை அவர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்" எனத் தெரிவித்தார். 

 

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்குமா என்ற கேள்விக்கு, "சென்னைக்கு விமான நிலையம் அவசியம் தான். ஆனால் அது பரந்தூரில் தான் வரவேண்டும் என்பதை காங்கிரஸ் கூறவில்லை. நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். சிறு சிறு குறைகள் இருந்தாலும் சுட்டிகாட்டி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.