Skip to main content

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

CONGRESS PARTY IN TAMILNADU STATE NEW  LEADERS APPOINTED

 

இந்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். 

 

அதன்படி, மறைந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கே.வீ.தங்கபாலுவின் மகன் கார்த்திக், திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் ஆகியோரும் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்களாக கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

தமிழக காங்கிரஸின் 19 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, ராமசாமி, சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், மோகன் குமாரமங்கலம், கார்த்திக் சிதம்பரம், விஷ்ணு பிரசாத், மாயூரா ஜெயக்குமார், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், சசிகாந்த் செந்தில், ஜே.எம்.ஹாரூண் ரசீத், ஜோதிமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியேறிய விஜயதாரணி; வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
The video was released by the Tamil Nadu Congress for Vijayadharani who left from party

கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விஜயதாரணி 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தாகவும் அது கிடைக்காமல் போக பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்ததாகவும், ஆனால் சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று (24-02-24) பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (பக்கத்தில்) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்பு பேசிய ஒரு பழைய வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளது. அதில் ராகுல் காந்தி, ‘எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்’ என்று கூறியுள்ளார். 

Next Story

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் நியமனம்; தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 17/02/2024 | Edited on 18/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu for New Chairman of Tamil Nadu Congress Committee appointed

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கு. செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நியமித்து அறிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்புகளைக் காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்ததற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ். அழகிரியின் எதிர்காலப் பணிகள் சிறக்கவும் - காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம்! இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்!’ என்று பதிவிட்டுள்ளார்.