தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்வதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார் ராகுல்காந்தி.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி.
விமான நிலையம் வந்த ராகுல்காந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்துள்ள நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜனவரி 25-ஆம் தேதி அன்று மாலை மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். ஏற்கனவே பொங்கல் திருநாள் அன்று மதுரைக்கு வருகை தந்த ராகுல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.