Skip to main content

சேர்மன் பதவி மோதல்; ‘தீ குளிப்பேன்’ என மிரட்டும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்   

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Conflict over chairman position; Organizer of the Women's Volunteer who threatens

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றிய திமுக மகளிர் தொண்டரணியில் இருப்பவர் மஞ்சுளா. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். அங்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் குடியாத்தம் ஒ.செ கல்லூர் ரவி மீது குற்றம்சாட்டி சமூக வளைத்தளங்களில் கடுமையாக கருத்து பதிவிட்டுள்ளார் மஞ்சுளா. அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பக்கத்து ஊராட்சியான தாட்டிமானபல்லியிலிருந்து பக்கத்து ஊரான கல்லப்பாடியில் போட்டியிட்டேன். ஆனால், நான் போட்டியிடுவதை விரும்பாத  குடியாத்தம் முன்னாள் ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி, ஒரு சுயேட்சை வேட்பாளரை தென்னை மர சின்னத்தில் நிற்கவைத்து தனது ஆளும் அதிகாரம் அத்தனையும் பயன்படுத்தி மிக வெளிப்படையாகவே எனக்கு எதிராக வேலை செய்து  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட என்னை தோற்கடித்தார். தலைவர் நல்லாட்சி, உதயசூரியன் சின்னம், பொதுமக்களின் அமோக ஆதரவு அத்தனை இருந்தும் கழகத்தின் உயர் பதவியை அனுபவித்துவரும் கல்லூர் ரவியால் நான் தோற்றுப்போய் நடுத்தெருவில் நிற்க வைக்கப்பட்டுள்ளேன்.

 

கட்சிக்கு துரோகம் செய்தவர் கட்சிப்பதவியில் நீடிக்கலாமா? இதைவிட மிகப்பெரிய துரோகம் வேறு ஏதாவது இருக்கிறதா? பெண்களின் பாதுகாவலரே எனக்கொரு நீதி சொல்லுங்கள். தற்போது கழகத்தின் சார்பில் கொண்டசமுத்திரம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற அண்ணன்  N.E.சத்யானந்தன் தான் ஒன்றிய பெருந்தலைவர் என்று, பொதுச்செயலாளரும் வேலூர் மாவட்ட கழக செயலாளரும் வாக்குறுதி அளித்த நிலையில் தலைமையை எதிர்த்து வேறு ஒரு வேட்பாளருக்கு கல்லூர் ரவி வேலை செய்கிறார். எனவே தலைமைக் கழகத்திற்கும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கும் வேலூர் மாவட்ட கழக செயலாளருக்கும் திமுகவினருக்கும் கல்லப்பாடி மஞ்சுளா ஆகிய நான் தெரிவித்துக்கொள்வது, சத்யானந்தனை ஒன்றிய பெருந்தலைவர் வேட்பாளராக வாக்குறுதி அளித்தபடி அறிவிக்கவில்லை என்றால் நாளை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் 100 பேர் முன்னிலையில் நான் தீக்குளிப்பேன். இங்ஙனம் கல்லப்பாடி மஞ்சுளா’ என்று பதிவிட்டுள்ளார். 

 

இதுகுறித்து நாம் மஞ்சுளாவிடம் கேட்டபோது, “நான் தீவிரமான கட்சி விசுவாசி, ஆக்டிவ் கள அரசியல்வாதி. அதனாலேயே என்னை கல்லூர் ரவிக்கு பிடிக்காது. நான் போட்டியிட்ட வார்டில் சுயேச்சையாக ஒருவர் போட்டியிடுகிறார். அவர் கல்லூர் ரவிக்கு வேண்டப்பட்டவர். அவருக்கு 2 கோடி ரூபாய்க்கு காண்ட்ராக்ட் தருகிறார். அவரை வாபஸ் வாங்கு எனச்சொல்லியிருந்தால் வாங்கியிருப்பார், ஆனால் வாங்கச் சொல்லவில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் அவருடன் கை குலுக்குகிறார். அதை வைத்துதான் சொல்கிறேன் அவருக்கு இவர் சப்போட். என்னை தோற்கடிக்க மறைமுகமாக கூட்டுவைத்துள்ளார். இப்போது அவரை திமுகவுக்கு கொண்டுவந்து துணைதலைவர் பதவி தருகிறேன் என வாக்குறுதி தந்து அழைத்துவருகிறார் இது நியாயமா” என்றார்.

 

இதுகுறித்து குடியாத்தம் திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, சேர்மன் பதவிக்காக துரைமுருகன் ஆதரவாளரான ஒ.செ கல்லூர் ரவிக்கும், மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ ஆதரவாளரான மற்றொரு ஒ.செ சத்தியானந்தத்துக்கும் இடையே மோதல் நடக்கிறது. அந்த மோதலின் வெளிப்பாடுதான் ரவியை டேமேஜ் செய்து, சத்தியானந்தத்துக்கு ஆதரவாக மஞ்சுளாவின் மிரட்டல்போல் உள்ளது என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.