Skip to main content

இடிந்த சுற்றுச்சுவர் - கண்டு கொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021
jk

 

சென்னை கோட்டூர் 172வது வட்டத்திற்குட்பட்ட, ஏரிக்கரை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் விளையாட்டு மைதானத்தின் பக்கவாட்டில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த நவம்பர் மாதம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த நாள் முதல் தற்போது வரை மூன்று மாதங்களாகியும் சரிசெய்யபடாமல் மாநகராட்சி அதிகாரிகள் ஆழமான, ஆபத்தான பகுதி, யாரும் இங்கு இறங்க வேண்டாம் மீறுபவர்கள் காவல்துறை வசம் ஒப்படைப்படும் என எழுதி பெயர் பலகையை வைத்துள்ளனர். விளையாட்டு மைதானத்தின் அருகில் பிர்லா கோளரங்கம் உள்ளது. இதனை கூட கருத்தில் கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் இப்பணியை கிடப்பில் போட்டுள்ளது பிர்லா கோளரங்கத்தின் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

 

மைதானத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாததன் காரணத்தினால், இதனை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுச் சுவர் இல்லாததால் தான் சமூக விரோதிகள் மைதானத்தினுள் ஊடுருவுகின்றனர். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சுவரை சரி செய்து தர சிறுவர்களும், இளைஞர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் பயங்கர தீ விபத்து!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Coimbatore Corporation Vellalur fire incident

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல லட்சக்கணக்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் நேற்று மாலை திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அதே சமயம் ஹிட்டாட்சி மற்றும் பொக்லைன் வாகனங்கள் மூலம் குப்பைகள் நகர்த்தப்பட்டும் மற்ற இடங்களுக்கும் தீ பரவாமலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரண்டு டிரோன்கள் மூலம் தீப்பற்றி எரியும் இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. 

Next Story

அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Attention those who are waiting for government jobs; Major announcement release

தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 1,933 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.