Skip to main content

திண்டுக்கல் எம்.பி. சீட்டு யாருக்கு? மோதும் கரை வேஷ்டிகள்!

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

பாராளுமன்ற தேர்தல் வருகிற 2019ல் நடைபெற் இருப்பதால் அரசியல் கட்சிகள் எல்லாம் விறு விறுப்பாக தேர்தல் களத்தில் குதித்து ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அதன்மூலம் நகரம், ஒன்றியங்களில் பூத் கமிட்டிகளையும் அமைத்து தேர்தல் பணிகளுக்காக கட்சிக்காரர்களை உசுப்பிவிட்டு வருகிறார்கள்.

 

 

இந்தநிலையில் ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் உள்ள கரை வேஷ்டிகள் போட்டி போட்டுக்கொண்டு இப்பவே சீட்டுக்காக மோதியும் வருகிறார்கள். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி நீங்கலாக திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதியை கொண்டதுதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியாக இருந்து வருகிறது. இந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருப்பவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உதயகுமார். இந்த உதயகுமாரின் சொந்த ஊர் நிலக்கோட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டி. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது நிலக்கோட்டை  பேரூராட்சி வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு உதயகுமார் தோல்வியடைந்தார். அப்படி இருந்தும் கூட ஜெ. ஆசி மூலம் எம்.பி. சீட் கிடைத்து வெற்றி பெற்றும் கூட தொகுதி பக்கம் சரிவர தலைகாட்டவில்லை. வாக்களித்த மக்களுக்கு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 

 

mp seat

 

இந்த நிலையில் ஜெ. மறைவிற்கு பிறகு டிடிவி பக்கம் சாய்ந்துவிட்டு மீண்டும் ஆளுங்கட்சியில் ஐக்கியமாகி தன்னை மட்டும் வளர்த்து வந்த உதயகுமார் சமீபத்தில் ரயில்வே கேட் கீப்பர் மணிமாறனை தாக்கியதின் மூலம் கட்சி தலைமைகளையும், பொதுமக்களிடமும் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறார். அப்படியிருந்தும் கூட மீண்டும் எம்.பி. சீட்டுக்கு எடப்பாடி வரை மோதி வருகிறார். ஆனால் எடப்பாடியோ உளவுத்துறை மற்றும் கட்சிப்பொறுப்பாளர்கள் மூலம் ஆய்வு செய்து முன்னாள் முப்பெருந்துறை அமைச்சரான நத்தம் விசுவநாதனை நிறுத்தினால் வெற்றிபெற முடியும் என ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே நத்தம் விசுவநாதன் நான்கு  முறை எம்.எல்.ஏ.வாக இருந்து இரண்டுமுறை அமைச்சராகவும் மாவட்ட செயலாளராகவும் இருந்ததின் மூலம் கட்சிப் பொறுப்பாளர்கள் முதல் பொறுப்பாளர்களை வரை வந்து அறிமுகமானவராக இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் எடப்பாடியும் நத்தம் விசுவநாதனை களத்தில் இறக்கப் போவதாக தெரிவதால் விச்சுவும் எம்.பி. சீட்டு ரேசில் இருக்கிறார்.

 

mp seat

 

அதோடு சிட்டிங் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான மருதராஜ் ஆரம்ப காலத்திலிருந்து கட்சியில் இருந்து வருவதால் கட்சிப் பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை நன்கு அறிமுகமானவராகவும், திண்டுக்கல் மாநகரில் முதல் மேயராகவும் இருந்து இருக்கிறார். அதன் அடிப்படையில் மருதராஜின் அமைச்சர் சீனி மூலம் எம்.பி. சீட்டுக்கு அடி போட்டு வருகிறார். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தழுவிய ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பாலசுப்ரமணி உள்பட சில ர.ர.க்களும் சீட்டுக்காக அமைச்சர் சீனிவாசனின் சிபாரிசை நாடி வருகிறார்கள். 

 

mp seat

 

தி.மு.க.வை பொறுத்தவரை கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் துணை சபாநாயகர் தலைமை செயற்குழு உறுப்பினருமான காந்திராஜன் தொடர்ந்து தலைவர் ஸ்டாலினுக்கும், ஐ.பிக்கும் விசுவாசமாக இருந்து கொண்டு கட்சிப்பணியை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு கட்சி அறிவிக்கும் போராட்டம், ஆர்ப்பாட்ம், பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்கு விசுவாசமாகவும், மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ.மான சக்கரபாணிக்கும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமாருக்கு ஆதரவாகவும் செயல்பட்டுக்கொண்டு கட்சித் தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயரும் எடுத்து வரும் காந்திராஜன் மீண்டும் தேர்தலில் குதிக்க சீட் கேட்டு வருகிறார். 

 

mp seat

 

அதுபோல் தலைமை செயற்குழு உறுப்பினரான சாணார்பட்டியைச் சேர்ந்த விஜயன், முன்னாள் அமைச்சர் விசுவநாதனோடு நத்தம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அப்படியிருந்தும் தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றிக்கொண்டு தலைமைக்கும், ஐ.பி.க்கும் விசுவாசமாக இருந்து வரும் விஜயன் இந்த எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டும் வருகிறார்.

mp

 

அதுபோல் பழனி முன்னாள் சேர்மன் வேலுமணி உள்பட சில உ.பி.க்களும் சீட் கேட்டு வருகிறார்கள். இதில் முன்னாள் அமைச்சரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பி.யின் கடைக்கண் பார்வை யாருக்கு விழுகுதோ அவர்களுக்குத் தான் எம்.பி. சீட் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

 

 

ஆனால் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் ஒரு வேலை தி.மு.க. இத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கினால் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரமும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வருகிறார் என்ற பேச்சும் அடிபட்ட வருகிறது. அதுபோல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் உள்பட சில கதர் சட்டைகளும் சீட்டுக்காக தலைமையில் மோதி வருகிறார்கள். இப்படி பாராளுமன்ற தேர்தலுக்காக இப்பவே அரசியல் கட்சிகளில் உள்ள கரை வேஷ்டிகள் சீட்டுக்காக தலைமையில் முட்டி மோதி வருகிறார்கள்!

 

mp

 

 

mp seat

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல் மாநகர செயலாளர் ராமுதேவர் சீட்டு கேட்கிறார். ஏற்கனவே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் அதிமாக போட்டியிட்டு வெற்றி பெற்றியிருப்பதால் அதே சமூகத்தை சேர்ந்த ராமுத்தேவர் அடிபோட்டு வருகிறார்.இவர் அதிமுக முன்னாள் நகர செயலாளராகவும், மாவட்ட அளவில் கட்சிக்காரர்கள் மத்தியில் அறிமுகமானவராகவும் இருந்து வருகிறார். அவருடன் மேலும் சிலரும் சீட் கேட்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்