Skip to main content

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் இழப்பீடு! - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

Published on 10/12/2020 | Edited on 11/12/2020

 

 Compensation for all flood affected houses - K. Balakrishnan

 

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் இழப்பீடு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் நிவர், புரவி புயலால், அனைத்துப் பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. சரியான கணக்கெடுப்பு நடைபெறவில்லை. காப்பீடு செய்யாதவர்களுக்கு, பயிர்க் காப்பீடு தொகை வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சுவர் இடிந்து, வீட்டிற்குப் பணம் தருவது என்பது தவறான நடவடிக்கையாகும், வெள்ளம் சூழ்ந்த அனைத்து வீடுகளுக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு, தலா ரூ.5 ஆயிரமும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்.

 

கடலூர் மாவட்டத்தில் ஏக்கருக்கு, நெற்பயிருக்கு ரூ.30 ஆயிரமும், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு செய்ய வேண்டிய கடைசி தேதியை டிச.15-ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பரவனாற்றை ஒழுங்குபடுத்தி, அருவாமூக்கு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தூர்ந்துபோய் உள்ள வீராணம் ஏரியை, தூர்வார வேண்டும். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் கதவணை கட்டப்பட்டு, 50 ஆண்டுகள் ஆகிறது. ஷட்டர்கள் பழுதாகிவிட்டது. எனவே புதிதாக ஷட்டர் அமைக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை உடனே வழங்க வேண்டும். காலதாமதமாக வரும் மத்தியக்குழு பரிந்துரை செய்யும் வரை, மத்திய அரசு நித வழங்கக் காத்திருக்கக் கூடாது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை, எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு உரிய சலுகை கிடைக்கும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

 

பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நிர்வாகிகள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து பி.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.