Skip to main content

“ஹிட்லரின் நிலைமையைப் போல வந்தால் அது அவமானம்...” - முத்தரசன் 

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Communist party Mutharasan speech in vck meeting in chennai

 

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விசிக சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஜனநாயகப் பாதுகாப்பு அறப்போர் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

விசிக கட்சியின் தலைவர் எம்.பி தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர் ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, திராவிடர் கழகம் கலி. பூங்குன்றன், ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் பேசுகையில், “நம்மை பெருமைப்படுத்திக்கொள்ள இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை; நாட்டிற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜனநாயக முறைப்படி ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வாய்ப்பு உண்டு. அதன்படி ஒரு கட்சி தோல்வியடைவதும், இன்னொரு கட்சி வெற்றி அடைவதும் ஜனநாயகத்தின் இயல்பு. பாரதிய ஜனதா கட்சி ஒரு காலகட்டத்தில் இரண்டு எம்.பி.க்களை மட்டுமே கொண்டிருந்தது. அப்படி விசிக, கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பிகளைக் கொண்டுள்ளது. வருகின்ற 2024ல் இந்த நிலை மாறும். அப்படி மாற்றுகின்ற சக்தி மக்களுடையது. மக்கள் நிச்சயம் மாற்றுவார்கள். இதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை சீர் குலைக்கத்தான் 2014 முதல் மெல்ல பாஜக அரசு நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறது. 

 

தனது காலம் முடிவடைகிற காரணத்தால் பழிவாங்கும் நோக்கம் வேகமடைந்துள்ளது. அதானியையும் அம்பானியையும் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தை செயல்படாமல் செய்கிறார்கள் இந்த மோடியரசு. வழக்கமாக எதிர்க்கட்சிகள்தான் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை ஏற்படுத்துவார்கள். ஆனால், இங்கோ தலைகீழாக இருக்கிறது. பாசிசம் ஒருபோதும் வெற்றி பெறாது. இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக இருந்த, கோடிக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் பாணியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார். அப்படி பின்பற்றினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை மோடி உணர வேண்டும். ஹிட்லரின் முடிவு பரிதாபகரமான முடிவு மட்டுமல்ல, வெட்ககரமான முடிவு.

 

இறுதியில் தற்கொலை செய்துகொண்டு ஹிட்லர் இறந்தார். அந்த நிலைமை மோடியே உங்களுக்கு ஏற்படக்கூடாது என்பது எங்களின் விருப்பமாகும். 140 கோடி மக்களுக்கு பிரதமராக இருக்கும் நீங்கள் தற்கொலை செய்துகொண்டு மரணித்தால் அது இந்த நாட்டிற்கு ஏற்படும் அவமானமாக இருக்கும். ஆகவே பாசிசம் ஒருபோதும் வெற்றி பெறாது” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.