Skip to main content

கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி வெற்றி!

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Communist Party of India Muthamilselvi wins as Vice President of Keeramangalam Municipality

 

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், கடந்த மார்ச் 4- ஆம் தேதி அன்று நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர்களைத் தேர்வு செய்தனர். ஆளும் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான இடங்கள் மற்றும் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடங்களில் தி.மு.க. கவுன்சிலர்களே போட்டி வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 

 

இது குறித்து கூட்டணிக் கட்சித் தலைமைகள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் செய்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர், துணைத்தலைவர்கள் உடனே ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

 

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் தமிழ்செல்வன் போட்டியிட்டு 15- க்கு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முத்தமிழ்செல்வி 4 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

 

இந்த நிலையில் கட்சித் தலைவர் அறிவிப்பைத் தொடர்ந்து கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவராக வெற்றி பெற்ற தமிழ்செல்வன் கடந்த மார்ச் 8- ஆம் தேதி அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று (26/03/2022) நடந்த தேர்தலில் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன் தேர்தல் நடத்தும் அலுவலராக வேட்பு மனு பெற்றார். முத்தமிழ்செல்வி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.