Skip to main content

திருடிய வண்டியுடன் வந்து பேருந்து நடத்துநரிடம் கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள்! 

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

College students who came with a stolen car and robbed the bus driver!

 

வேலூரில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வரை தனியார் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை இரவு நேரத்தில் மேல்மலையனூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி விட்டு அந்த பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் இரவு ஓய்வெடுப்பது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்தவர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் ஏறியுள்ளனர். 


இரவு நேரம் என்பதால், பேருந்தில் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து ஓட்டுநர் வைத்திருந்த ரூ. 8000 பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். பேருந்து ஓட்டுநர், திருடர்களை பிடிக்க துரத்திக் கொண்டு சென்றுள்ளார். அவரை தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்கள் ஓடும்போது கொள்ளையர்கள் வைத்திருந்த செல்போன் கீழே தவறி விழுந்துள்ளது. அதை கவனிக்காமல் தப்பிச் சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் தங்கள் செல்போன் தவறி விழுந்தது தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் மீண்டும் செல்போனை எடுப்பதற்காக பெட்ரோல் பங்குக்கு வந்துள்ளனர். 


அதற்குள் அங்கு பரபரப்பாகி ஓட்டுநர், நடத்துநர், பெட்ரோல் பங்கு ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். அந்த சமயம், அவர்கள் செல் போன் எடுக்க அங்கு வர, தன்னிடம் பறித்த பணத்தை திரும்பித் தருமாறு ஓட்டுநர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கொள்ளையர்கள் இருவரும், பெட்ரோல் பங்கு ஊழியர்களையும்  பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை தாக்க முற்பட்டனர். அப்போது அங்கு மக்கள் கூட்டம் கூடியது. கூட்டத்தை கண்டதும் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

 

இச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் ராஜா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவன், மற்றொருவர் 16 வயது பாலிடெக்னிக் மாணவன் என்பதும் தெரியவந்தது. 


இருவரும் குடிபோதையில் மேல்மலையனூர் அப்பகுதியில் நின்றிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வரும்போது பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்த பேருந்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநரிடம் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பேருந்தில் ஏற்ற மறுக்கப்பட்ட பெண் தூய்மைப் பணியாளர்கள்' - இருவர் சஸ்பெண்ட்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Women sanitation workers refused to board the bus' - two suspended

தஞ்சையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக 50க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளில் தூய்மைப் பெண் பணியாளர்கள் ஏற முயன்ற நிலையில் பேருந்து நடத்துனர்கள் பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவிப்பதோடு, அலைக்கழிப்புக்கு ஆளாக்குவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அலைக்கழிப்புக்கு ஆளான பெண்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் சாலையில் அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுப் பேருந்து மற்றும் ஆம்புலன்சில் பெண் பணியாளர்களைப் பணிக்கு அனுப்பி வைத்தனர்.

'Women sanitation workers refused to board the bus' - two suspended

இதில் பாதிக்கப்பட்ட பெண் தூய்மையாளர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாங்கள் 7:00 மணிக்கு டூட்டிக்கு போகணும். ஆபீசில் சொன்னாலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். 7:15 மணிக்குத்தான் பஸ் எடுக்க வேண்டும் எனக் கலெக்டர் சொல்லி இருக்காருன்னு சொல்கிறார்கள். அதான் கலெக்டர் வரட்டும் என நாங்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினோம். எங்களுடைய மேனேஜர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் இப்பொழுது போகிறோம். பஸ்ஸை நிப்பாட்ட சொன்னாலும் எந்தப் பஸ் ஸ்டாப்பிலும் நிப்பாட்டுவது கிடையாது. நாயை விடக் கேவலமாக நினைக்கிறார்கள்'' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பேருந்து நடத்துநர் மற்றும் பேருந்து நிலையத்தின் டைம் கீப்பர் ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பிறகு சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை' - மீண்டும் முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Father's health is not good'-MR Vijayabaskar seeks anticipatory bail again

தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் முன்ஜாமீன் மனுவை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.தொடர்ந்து தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஒருமுறை முன்ஜாமீன் மனு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க வேண்டி இருப்பதால் சிபிசிஐடி போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.