Skip to main content

ஊரடங்கால் பேருந்து நிலையத்தில் தவித்த பெண்கள்! - விடுதியில் தங்க வைத்த ஆட்சியர்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

pudukottai

 

இந்தியா முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக தினசரி 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று (20/4/2021) இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் நாளான இன்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பேருந்து நிலையம் உள்பட நகர் பகுதியில் ஆய்வு செய்தார். இவருடன் புதுக்கோட்டை கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வில் கலந்து கொண்டனர்.

 

பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது காரைக்குடியைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட ஒரு குடும்பத்தினர் திருவாரூர் கோயிலுக்குச் சென்று சொந்த ஊருக்குச் செல்ல புதுக்கோட்டை வரை வந்திருந்த நிலையில், திரும்பச் செல்ல பஸ் இல்லாமல் தவித்துக் கொண்டு நின்றனர். அதேபோல கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் (இதிலும் ஒரு பெண்) வடமாநிலத் தொழிலாளர்கள் என சுமார் 20 பேர் பேருந்து நிலையத்தில் பஸ் இல்லாமல் தவிப்பதைப் பார்த்து அருகில் நின்ற நகராட்சி ஆணையர் ஜீவசுப்பிரமணியனிடம் கூறி இவர்கள் இரவில் தங்க விடுதி ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். 

 

உடனே 20 பேரும் நகராட்சியில் தங்கி காலையில் ஊருக்குப் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசும் போது.. பேருந்து நிலையத்தில் தவித்த பெண்கள் உள்பட அனைத்துப் பயணிகளையும் இரவில் தங்க நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இது போல பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் தவிக்கக் கூடாது என்பதற்காக பேருந்து நிலையங்களில் பேருந்துகள் செல்லும் வழித்தடம் மற்றும் கால அட்டவணை (அரசு மற்றும் தனியார்) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பத்திரிகை ஊடகங்கள் மூலமாகவும் தெரிவிக்கப்படும் என்றார்.

 

டாஸ்மாக் கடைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. முகக் கவசம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. சமூக இடைவெளிக்கான கோடுகளும் போடப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.