Skip to main content

கலெக்டர் கொடுத்த கல்யாணப் பரிசு... கைநிறைய மரக்கன்றுகளை அள்ளிச் சென்ற பெண்!!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

தஞ்சாவூர்  மாவட்டம் பேராவூரணி வட்டம் மேல ஒட்டங்காடு. விவசாயிகள் நிறைந்த கிராமம் விவசாயம் என்பதைவிட விவசாய கூலித் தொழிலாளிகள் நிறைந்த ஊர். அந்த ஊரில் அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து படிப்பிற்கே படாதபாடுபட்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று அந்த பணத்தில் படித்து பட்டம் வாங்கி பெயருக்கு பின்னால் சில எழுத்துகளை போட்டுக் கொண்டதோடு நின்றுவிடாமல் தன் தாய், பாட்டியின் கீற்று பின்னும் உழைப்பில் கிடைத்த வருமானத்திலும் வாரத்தில் இரு நாட்கள் ரயிலேறி சென்னை பட்டணம் போய் முதல் நாள்  பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு அறை எடுத்து தங்கினால் பணம் வேண்டுமே என்று ரயில் நிலையத்திலேயே ஒரு இரவை கழித்துவிட்டு மறுநாளும் வகுப்புக்கு போய் மாலை ரயிலேறி கல்லூரி விடுதிக்கு வந்து கல்லூரி படிப்பையும் தொடர்ந்து நண்பர்களின் உதவியோடு கடும் உழைப்பும் முயற்சியும் பலன் கொடுக்க ஐஏஎஸ் தேர்ச்சியானார் சிவகுரு பிரபாகரன். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் போல ஆக நினைத்தேன். கனவு நிறைவேறியது என்று மகிழ்ந்தார்.

எங்கள் கிராமத்தில் முதல் ஐஏஎஸ் என்று கிராமமே கொண்டாட வழக்கம்போல தென்னங்கீற்று பின்னிக் கொண்டிருந்தார்கள் சிவகுருபிரபாகரனின் தாயும் பாட்டியும். கனவு நிறைவேறியது இனி பயிற்சிக்காக அழைப்பார்கள் அதுவரை இன்ப சுற்றுலா போகலாம் என்று எண்ணாமல் தன் ஊருக்கு வந்து கிராமத்தில் படித்து பட்டம் வாங்கிக் கொண்டு வீட்டில் இருந்த பலருக்கு வகுப்பெடுத்து குரூப் தேர்வுகளை எழுத தூண்டி சிலரை அரசு வேலைக்கு அனுப்பியதுடன் சில மாதங்களை வீட்டிலேயே கழிக்காமல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களில் உள்ள கிராம அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். நீங்களும் என்னைப் போல ஐஏஎஸ் ஆக வேண்டும் அதற்கு நிறை புத்தகங்கள் படிக்க வேண்டும், தினசரி செய்தித்தாள் படிக்க வேண்டும் என்று சுமார் 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார்.

 

The collector wedding gift ...

 

தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள்  கிராம வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று கிராம இளைஞர்களுடன் இணைந்து நின்று கேட்டவருக்கு..
 

இழந்த மரங்களை மீட்க வேண்டும் அதற்கு கிராமத்தில் மரக்கன்றுகள் நடவேண்டும், நீர்நிலைகளில்தண்ணீரை நிரப்ப வேண்டும். அருகில் உள்ள களத்தூர், போன்ற கிராமங்களில் இளைஞர்களே இந்தப் பணியை  செய்து சாதித்துள்ளார்கள். கீரமங்கலம், கொத்தமங்கலம், ஏம்பல் போன்ற கிராமங்களில் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் இந்தப் பணிகளை செய்து வருகிறார்கள் என்றோம். அடுத்த நாளே இளைஞர்களை இணைத்து அப்துல் கலாம் கிராமவளர்ச்சிக் குழுவை உருவாக்கி பல வருடங்களாக மராமத்து செய்யப்படாத பெரிய ஏரியை மராமத்து செய்து குருங்காடுகள் அமைத்து மரக்கன்றுகளை நட்டார்.
 

திருநெல்வேலியில் சார் ஆட்சியர் என்றாலும் விடுமுறை நாட்களில் கிராமப்பணிகள். விவசாயத்திலும் ஆர்வமாக இருந்ததால் தென்னைக்குள் ஊடுபயிர் செய்ய அனுபவமிக்க விவசாயிகளிடம் நேரில் சென்று அனுபவங்களைக் கேட்டு மண்ணுக் கேற்ற பயிர் செய்யும் பணியையும் செய்ய தொடங்கினார். மிளகு நாற்று அவரது தென்னை மரங்களில் படர காத்திருக்கிறது.

இந்த சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ் திருமணம் புதன் கிழமை பேராவூரணி நீலகண்ட விநாயகர் ஆலயத்தில் நடந்து ஒரு மண்டபத்தில் விருந்து நடந்த போது நாம் சக பத்திரிகை நண்பர்களுடன் சென்று விவசாயத்தின் மீது பற்றுக் கொண்ட சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் - மருத்துவர் கிருஷ்ணபாரதி இணையருக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஏர் கலப்பையை கல்யாணப் பரிசாக கொடுத்தோம்.
 

கல்யாணத்திற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார் சார் ஆட்சியர். 2 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்குகிறோம் இதில் ஆயிரம் கன்றுகளாவது நிச்சயம் வளர்க்கப்படும் என்றார்கள் மணவீட்டு இளைஞர்கள்.


 

The collector wedding gift ...

 

கை நிறைய மரக்கன்றுகளை அள்ளி மார்போடு அனைத்துச் சென்ற பெண்மணி.. 

கலெக்டர் வீட்டு கல்யாணத்தில கொடுத்தாங்க என்று பெருமையாக சொல்லிக் கொண்டு சென்றார். தான் உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டோம் என்று தான் பிறந்து வளர்ந்த ஊரை மறந்து செல்லும் பலர் மத்தியில் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தனக்கு மனைவியாக வருபவரும் தன் கிராமத்து மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று மருத்துவரை கரம் பிடிக்கும் முன்பே.. வார விடுமுறை நாட்களில் கிராமத்துக்கு வந்து கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க மணமகளும் சம்மதம் என்றதும் கரம் பிடித்துள்ளார். 
 

இதேபோல ஊரை காதலிக்கும் மேலும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக.. வாழ்த்துகள் இணையர்களுக்கு.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.