
கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் ஸ்ரீ ராஜா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். இந்த ஓட்டல், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதாகவும், பேருந்து நிலைய பகுதிகளில் இரவு 11 மணிவரை செயல்படவும், 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு செயல்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (11.04.2021) இரவு 10.20 மணிக்கு ஓசூரில் இருந்து வந்த பயணிகள் மிகவும் பசிக்கிறது எனக் கூறியதை அடுத்து, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஓட்டலின் ஷட்டரும் பாதி அளவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த எஸ்.ஐ. முத்து, ஓட்டலின் உள்ளே நுழைந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கியுள்ளார். இதில், ஒரு பெண்ணுக்குத் தலையிலும், ஒருவருக்கு கையிலும் என 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக, காவல்துறை ஆணையரிடம் ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். ஓட்டலுக்குள் புகுந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அக்காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.