Skip to main content

தமிழகத்தைப் பதற வைத்த கோவை படுகொலை; குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீஸ் 

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

coimbatore police shot  and caught criminals

 

கோவையை அடுத்த கோவில்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி கோகுல்ராஜ் மீது கோவையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் கோவை நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட வந்த கோகுல்ராஜை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. அதனைத் தடுக்க வந்த மனோஜையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்த நிலையில் இந்தக் கொலையில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோகுல்ராஜை கொலை செய்த கும்பல் கோத்தகிரியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில்  ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கோத்தகிரி போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கொலையில் சம்பந்தப்பட்ட ஜோஸ்வா (23), டேனியல் (27), எஸ்.கவுதம் (24), கவுதம் (24), பரணி சவுந்தர் (20), அருண்சங்கர் (21),  சூர்யா (23) உள்ளிட்ட 7 பேரையும் கோத்தகிரி போலீசார் கைது செய்து தனிப்படையிடம் ஒப்படைத்தனர்.  

 

இதையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரும் நேற்று கோவைக்கு இரண்டு கார்களில் அழைத்து வரப்பட்ட நிலையில் பாதியில் ஜோஸ்வா, எஸ்.கவுதம் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாகவும் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இதையடுத்து இருவரும் காரில் இருந்து கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதனை பயன்படுத்திக்கொண்ட ஜோஸ்வாவும் எஸ்.கவுதமும் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை போலீசார் துரத்திச் சென்றபோது புதரில் கிடந்த அரிவாளை எடுத்து போலீஸை தாக்கத் தொடங்கியுள்ளனர். அதில் யூசப் என்ற காவலருக்கு கையில் வெட்டுப்பட்டுள்ளது. 

 

இதனால் காவல் உதவி ஆய்வாளர் இருளப்பன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் நோக்கி சுட்டுள்ளார். அதில் ஜோஸ்வாவின் வலது காலில் இரண்டு குண்டுகளும், எஸ். கவுதமின் இடது காலில் ஒரு குண்டும் பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் பிடித்த காவலர் யூசப் உட்பட மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.