Skip to main content

கைக்கு வந்த கடிதம்; மாணவிக்கு போன் செய்த முதல்வர்!

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

Cm Stalin congratulated Trichy College student on phone

 

திருச்சி வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கல்லூரி கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி தெரிவித்து கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் கொடுத்தார். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மாணவியைப் பாராட்டி வாழ்த்திச் சென்றார். 

 

திருச்சி சங்கிலியாண்டபுரம் கோனார் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி மகள் ராஜேஸ்வரி. இவர் கடந்த கல்வியாண்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், அதன் பின்னர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அவர் விரும்பிய பி.டெக் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் அங்கு சென்று சேர்ந்தார். ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செலுத்திய கல்விக் கட்டணம் திருப்பி அவருக்கு வழங்கப்படவில்லை. 

 

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டும் கட்டணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுபோல பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டுமின்றி பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து வேறு கல்லூரிகளில் சேர்ந்த மாணவ மாணவியருக்கு கல்விக் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படாமல் இருந்து தெரியவந்தது. இது குறித்து ராஜேஸ்வரியின் தந்தை புகழேந்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டு, கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்க கோரிக்கை விடுத்து மனுவையும் அளித்தார்.  உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறிச்சென்றார். அதுபோலவே, முதலமைச்சரிடம் மனு அளித்த 10 நாட்களில் ராஜேஸ்வரி மட்டுமின்றி, அவரைப் போல் கல்லூரி மாறிய பிற மாணவ மாணவியருக்கும் (சுமார் 15 பேர்) அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. 

 

இந்நிலையில், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை காலை திருச்சி வந்த தமிழக முதல்வர் விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட போது, மாணவி ராஜேஸ்வரி கல்விக் கட்டணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அதனை காரில் இருந்தபடி முதலமைச்சர் பெற்றுக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.  

 

சிறிது நேரத்தில் ராஜேஸ்வரியின் செல்பேசிக்கு வந்த அழைப்பில் தமிழக முதல்வர் பேசியுள்ளார். மாணவியைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்து நன்றாகப் படிக்க வேண்டுமென அறிவுரை கூறிச்சென்றுள்ளார். இது குறித்து மாணவி கூறுகையில், “மாணவ மாணவியரின் பொதுப்பிரச்சனை தொடர்பாக அளித்த மனுவுக்கு முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்ததுடன், செல்பேசியிலும் பேசி வாழ்த்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்