Skip to main content

"நான் ஒரு விவசாயி"- முதல்வர் பழனிசாமி!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020
cm palanisamy press meet at ramanathapuram district

 

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கு பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

 

"தமிழகம் முழுவதுமே கரோனா படிப்படியாகக் குறைந்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. முதலமைச்சரின் சிறப்பு குறைத் தீர்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மனுக்களைப் பெற்று வருகின்றனர். ரூபாய் 14,000 கோடியில் காவிரி- குண்டாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் இராமநாதபுரம் மாவட்டம் செழிப்படையும். காவிரி- குண்டாறு திட்டத்தின் மூலம் இராமநாதபுரத்தில் உள்ள நீர் நிலைகள் செழிப்படையும். இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. விவசாயம் செய்யும் என்னை விவசாயி என்று தான் என்னால் கூறிக் கொள்ள முடியும்.

 

ஒரு விவசாயி என்பதால் தான் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. விவசாயம் பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன், விவசாயம் செய்பவன். விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடியவை என்பதால் தான் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை ஆதரித்தோம். வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியிடம் விளக்கம் கேட்கப்படும். விவசாயிகளைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக எதிர்க்கும். காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் செய்தது மு.க.ஸ்டாலின்தான். ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டாவிற்கு வர காரணம் மு.க.ஸ்டாலின்தான்.

 

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக்கி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தது அதிமுக அரசு. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, அரசுக் கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது." இவ்வாறு முதல்வர் கூறினார்.

 

கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என எல்.முருகன் கூறியது பற்றிய கேள்விக்கு, "கோட்டையில் தேசிய கொடிதான் பறக்கும்" என முதல்வர் பதிலளித்தார்.

 

இதனிடையே, சசிகலா விடுதலையாகி அதிமுகவில் இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த கேள்விக்கு தகுதியான இடம் இது வல்ல; எனக்கூறி முதல்வர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

ரூ. 112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ராமநாதபுரத்தில் பரபரப்பு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rs. 112 Crore cannabis seized  to Sri Lanka

தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.