Skip to main content

முதல்வரின் ஒரு நாள் வருகைக்கு பளபளன்னு புது ரோடு... நாங்க இறந்தவர் உடலை வயலில் இறங்கி தூக்கிச் செல்கிறோம்... 40 ஆண்டு அவலம்...

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

ddd

 

தமிழக முதல்வர் உள்பட மத்திய மாநில அரசாங்க பிரதிநிதிகள், எந்த ஊருக்குப் போனாலும், சொகுசு கார்களில் செல்லும் போதும்கூட, குலுங்காமல் செல்ல வேண்டும் என்பதற்காக பல வருடங்களாகப் பள்ளமும் படுகுழியுமாக உள்ள சாலைகளை இரவு பகலாக வேலை பார்த்து பளபளக்கும் சாலைகளாக்குகிறார்கள்.

 

ஆனால், பல கிராமங்களில் இறந்தவர் உடலை, மயானத்திற்குக் கொண்டு செல்ல பாதை இல்லாமல், பயிர்கள் வளர்ந்துள்ள வயலுக்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை இப்போது வரை உள்ளது வேதனை அளிக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நாகுடி அருகில் உள்ளது கீழ்குடி கிராமம். சுமார் 200 குடும்பங்கள் வரை வசிக்கிறார்கள். இந்த கிராமத்தில் யார் இறந்தாலும் அவர்களை மயானத்திற்கு தூக்கிச் சென்று இறுதிச் சடங்குகள் செய்ய படாதபாடுபடுகிறார்கள் உறவினர்கள்.

 

அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சிவகுமார் - வெள்ளையம்மாள் தம்பதிகளின் ஒரே மகன் திருக்குமாரன் (வயது 17). அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்தார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குப் போனபோது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி. கனையத்தில் பிரச்சனை என்று சொன்னார்கள். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்ல, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நேற்று 8 ஆவது நாளில் 'நீங்க ஊருக்குப் போகலாம்' என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியே அனுப்பியது. 

 

Ad

 

துணைக்கு இருந்த தாய் வெள்ளையம்மாளிடம், 'காரில் ஊருக்கு போக ரூ3 ஆயிரம் வேணும், எதுக்கும்மா இவ்வளவு செலவு செய்யனும், பஸ்ல போவோம்' என்று திருக்குமரன் நேற்று மாலை ஊருக்கு வந்து சேர்ந்தார். 

 

உறவினர்கள், நண்பர்கள் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். இரவு 8 மணிக்கு மாத்திரை சாப்பிட்டுப் படுக்கப்போன திருக்குமரன் 10 மணிக்கு ஃபிட்ஸ் வந்து துடிக்க மீண்டும் நாகுடி, அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் பயனில்லை. சிறுவனின் உயிர் போய்விட்டது. உறவினர்கள் கூடி அறுவை சிகிச்சையில் கோளாறு இருக்கிறது என்று சொன்னார்கள்.

 

dddd

 

இன்று காலை அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்குக் கொண்டு செல்ல தூக்கிச் சென்றார்கள். சிறிது தூரத்தில் பாதை முடிந்து பயிர்கள் போர்த்திய வயல்கள் தான் தெரிந்தது. அந்த வயல்களில் இறங்கி பயிர்களை மிதித்துக் கொண்டே திருக்குமரன் சடலத்தை தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர்.

 

மயானத்தற்குச் சாலை இல்லையா? என்ற கேள்விக்கு, "கிட்டதட்ட 40 வருடத்துக்கு மேல இப்படித்தான் பாதை இல்லாமல் வயல்களில் பயிர்களை மிதிச்சுகிட்டு சடலங்களை சுமக்கிறோம். அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. பாதை இல்லைன்னு சடலத்தை வீட்டிலேயேவா வைத்திருக்க முடியும். வயல்களில் இறங்கி நடக்கிறோம். எங்க ஊருக்கு எப்பதான் மயானச் சாலை போடுவாங்களோ... நாடு முன்னேறிடுச்சுன்னு மேடை பேச்சுக்கு வேணும்னா பேசலாம், சுடுகாட்டுக்குப் போவ பாதை இல்லாத எத்தனையோ கிராமங்கள் இருக்கு. அதில் ஒன்னு கீழ்குடி. மாவட்ட ஆட்சியராவது தலையிட்டு மயான சாலை அமைத்துக் கொடுக்கனும்" என்றனர் உறவினர்கள்.

 

Nakkheeran

 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கரோனா குறித்த ஆய்வுக்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22 -ஆம் தேதி வருகிறார். அவர் செல்லும் வழி விராலிமலை. அதனால் கடந்த சில நாட்களாக வழியெங்கும் பதாகைகள் வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நல்லா இருக்கும் சாலைகள் உள்பட பல வருடங்களாகப் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாகக் கிடந்த சாலைகளும் வேகமாக புதிய சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால், அதே மாவட்டத்தின் கீழ்கோடியில் உள்ள கீழ்குடியில் பல வருடங்களாக மயானத்திற்குச் சடலத்தைக் கொண்டு செல்ல ஒரு சாலை இல்லை என்பது வேதனையிலும் வேதனை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.

Next Story

பைசா செலவில்லாமல் சுகப்பிரசவம்! கவனிக்க வைக்கும் எதிர்ப்பு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
People are struggle by posting notices in a different way demanding  repair road

திருப்பத்துார் மாவட்டம், பொம்மிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாதனவலசை, பழத்தோட்டம், ஓம்சக்தி நகர் கூட்டுரோடு பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கின்றனர்.

இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிகின்றது. இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள் இப்படிக்கு ஊர் மக்கள் சார்பில், என குறிப்பிட்டு நோட்டீஸ் ஒன்று சுற்றுவட்டார கிராமங்களில் விநியோகம் செய்துள்ளனர் மேலும் பொம்மிக்குப்பம் பல்வேறு பகுதிகளில் நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளனர். 

அதில், இன்றைய காலகட்டத்தில் பல கர்ப்பிணிப் பெண்களின் கனவு சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்று கொள்வதுதான். இவர்களின் கனவை நனவாக்க அதிசய சாலை திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது. எத்தனையோ மருத்துவர்கள், மகப்பேறு காலத்தில் அறுவை சிகிச்சை செய்தால் தான் தாயும் சேயும் நலமாக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. இதனால் மருத்துவ செலவை எண்ணி நினைக்கும் போதே கர்ப்பிணிப் பெண்கள் மனமுடைந்து விடுகின்றனர். 

People are struggle by posting notices in a different way demanding  repair road

அவர்களின் துயரத்தை போக்கத்தான் இங்கு அதிசய சாலை உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த சாலையில் தற்செயலாக பயணம் செய்யும் போதே சுகப்பிரசவமாக குழந்தை பெற்று உள்ளனர் என அச்சடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறிப்பு எனக்கூறி, அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள், பொம்மிகுப்பம் ஊராட்சி மன்றத்தின் முறையான அனுமதி பெற்ற பிறகே பயணம் செய்ய வேண்டும். மீறி கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்தால், நாங்கள் பொறுப்பல்ல என்பதை தங்களின் பணிவான கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வித்தியாசமாக தங்களது எதிர்ப்பினை அந்த கிராம மக்கள் வெளிக்காட்டியுள்ளது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.